கேரளா புறப்பட்டார் மு.க ஸ்டாலின்..முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பினராயி விஜயனுடன் பேசுகிறார்
சென்னை: தென்மாநிலங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை கேரளாவில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா புறப்பட்டு சென்றார். அங்கு தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது.
இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
10 வருடங்களாக அலைந்த காலேஜ் கிளாஸ்மேட்! பத்தே நாட்களில் முடித்துக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பல்வேறு பிரச்சினைகள்..
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில், மேற்கண்ட மாநிலங்களில் உள்ள மாநில எல்லை பிரச்சினை, நதிநீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். கடந்த ஆண்டு இந்த கூட்டம் திருப்பதியில் நடந்த நிலையில், தற்போது நடப்பு ஆண்டுக்கான கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகிறது.
கேரளா செல்லும் மு.க ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் மேற்கண்ட மாநில முதல்வர்கள் அனைவரும் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பர். இந்த நிலையில், நாளை நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேரளா புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். பிற்பகல் மணியளவில் திருவனந்தபுரத்தை சென்றடையும் மு.க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச உள்ளார்.
கேரள முதல்வருடன் சந்திப்பு
இந்த சந்திப்பின் போது முல்லைப்பெரியாறு பிரச்சினை, பேபி அணையை பலப்படுத்துவது, சிறுவானி மற்றும் நெய்யாறு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று மாலை நடக்கும் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளில் மு.க ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
நாளை திரும்புகிறார்
கேரள அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாட உள்ளார். இதையடுத்து கூட்டம் முடிந்ததும், நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.