தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே ஒரே மாதிரி .. திமுக பிளான் டிகோடிங்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவித்த திட்டங்களை எல்லாம் கவனித்தால், ஒரே மாதிரி தான் இருக்கிறது.. அந்த திட்டங்கள் எல்லாம் மிகவும் ஏழை மக்களை குறிவைத்தே உள்ளன. ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள் குறித்துமே திட்டங்களாக செயல்படுத்தி உள்ளது.
கலைஞர் கருணாநிதி 2006ல் ஆட்சிக்கு வந்த போது அனைவருக்கும் கலைஞர் டிவி வழங்கினார். இந்த கலைஞர் டிவி ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அந்த திட்டம் காரணமாக அன்று வரை வெளி உலகம் அறியாத ஏழை மக்கள் பலர், செய்திகள் மூலம் பல விஷயங்களை அறிந்து முன்னேறினார்கள். அந்த டிவியால் மிகப்பெரிய சமுதாய மாற்றம் நடந்தது.

அதன்பிறகு மறைந்த முன்னாள் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச லேப்டாப் திட்டமும் மிகப்பெரிய அறிவு முதலீடாக பார்க்கப்பட்டது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அதிமுக மற்றும் திமுக கொண்டு வந்த இலவச திட்டங்கள் மிகப்பெரிய அளவில் உதவின. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக 2021ல் பொறுப்பேற்ற பின்னர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் கொஞ்சம் வித்தியாசமானது. அது எப்படி என்றால் இதுவரை வந்த திட்டங்களை எல்லாம் தாண்டி நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்களாக இருக்கிறது. அதுவும் எப்படி என்றால் மிகவும் ஏழையாக உள்ள மக்கள், அதாவது அடித்தட்டில் உள்ள மக்களை குறிவைத்து திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் ஸ்டாலின்.
மகளிர் உரிமை தொகை: மகளிருக்கு 1000 உதவி தொகை என்பது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சுமார் ஒரு கோடியே 7 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்தால் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகள் கல்லூரிகளில் சேர இந்த திட்டம் மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக மாணவிகள் கல்வி பயலும் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
மாணவிகளுக்கு 1000 உதவி தொகை : இதேபோல் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மட்டுமல்லாது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவியிருக்கும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த திட்டமும் ஏழை மாணவியர் பயன்பெறுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் புதல்வன் திட்டம்: அதற்கு அடுத்தபடியாக அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட, அரசுப் பள்ளி மாணவரின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்தவும் தமிழ் புதல்வன் என்னும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு உதவி தொகை: தேபோல் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள் ,பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவரது கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் வீடு வழங்கும் திட்டம்: குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்ங்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலே சொன்ன எல்லா திட்டங்களிலும் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மகளிருக்கு இலவச பேருந்து: மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டமும், வேலைக்கு செல்லும் பல்வேறு மகளிருக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.இந்த திட்டமுமே அடித்தட்டில் உள்ள ஏழை மகளிர் வேலைக்கு செல்லவும் வெளியில் செல்லவும் பெரிய அளவில் உதவியாக உள்ளது. மகளிருக்கு இலவச பயணம் என்பது மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது
நான் முதல்வன் திட்டம்: இந்த திட்டங்களை எல்லாம் தாண்டி வேலைவாய்ப்பு பெரும் நோக்கில் நான் முதல்வன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று கூறுகையில், தனிச்சிறப்பு மிக்க நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை சுமார் 28 லட்சம் மாணவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். 18000 பொறியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும், 20000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கம் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்ட பயிற்சி பெற்ற மாணவர்களில் 1.19 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.இதேபோல் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் நோக்கம் என்னவென்றால் படித்த மாணவர்கள், வேலைக்கான திறன்களை வளர்ந்து, வேலைகளை பெற வேண்டும் என்பதுதான்..
மத்திய அரசு வேலைக்கு இலவச பயிற்சி: அதேபோல் மத்திய அரசு வேலைகளில் தமிழக மாணவர்கள் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக தங்கம் தென்னரசு இன்று கூறுகையில், "ஒன்றிய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் முதல் நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7500 ரூபாய் மற்றும் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் , இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்." என்று கூறியுள்ளார்.
இளம் வாக்காளர்கள்: திமுகவின் திட்டங்கள் எல்லாம் மிகவும் ஏழை மக்களை குறிவைத்தே உள்ளன. அதாவது நடுத்தர மற்றும் பணக்காரர்களை குறிவைக்காமல் மிகவும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இருக்கிறது. குறிப்பாக ஏழை குழந்தைகளின் கல்வியை அதிகரிக்கவும், அவர்கள் வேலைக்குரிய பயிற்சிகள் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுவும் வளரும் தலைமுறையான 17 முதல் 20 வயது இளைஞர்களை குறிவைத்தே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல் தலைமுறை வாக்காளர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திமுகவின் திட்டங்கள் இருப்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications