இனி யாராலும் வாலாட்ட முடியாது! பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் அடுத்தடுத்து நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கிடையே பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர் முருகானந்தம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பள்ளி, கல்லூரி எனக் கல்வி நிலையங்களில் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பலாத்காரம்: கடந்த மாதம் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது சிவராமன் உண்மையில் என்சிசி மாஸ்டரே இல்லையாம். பள்ளியில் நடந்ததும் போலி என்சிசி முகாம் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் வேறு சில மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. போலீசார் கைது செய்யும் போது சிவராமன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
பாலியல் தொல்லை: அதேபோல திருச்சி என்ஐடியில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அங்குப் பெண்கள் விடுதியில் பழுது பார்க்கச் சென்ற ஊழியர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி விடுதி வார்டனிடம் புகார் அளித்த போது, அந்த வார்டன் பெண் அணிந்த உடை குறித்து சர்ச்சை கருத்து கூறியிருந்தார். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த வார்டன் மன்னிப்பு கேட்டார்.
ஷாக் சம்பவம்: சமீபத்தில் கூட வால்பாறை அரசு கலைக்கல்லூரியில், மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து வந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட போது பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து 3 தற்காலிக பேராசிரியர்கள், ஒரு ஆய்வக உதவியாளர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்படி மாநிலத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
பறந்த உத்தரவு: மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துக் கல்லூரிகளிலும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாலியல் தொல்லை குறித்து புகார் வந்தால் அதில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமித்து அங்கு நடக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் புகார் குழு அமைக்க உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் முருகானந்தம்,அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும், கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்காணிக்க Anti drug clubகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications