தமிழ்நாட்டில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது ஏன்? தொடக்கக் கல்வித் துறை கொடுத்த விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து தொடக்க கல்வித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்க கல்வித் துறையின் கீழ் சுமார் 31 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 19 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டில் 207 தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம் என்று தெரிய வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.

அதன்படி நீலகிரியில் 17, சிவகங்கையில் 16, திண்டுக்கல்லில் 12, சென்னை, ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா 10 என்ற அடிப்படையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து அதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் 207 பள்ளிகள் மூடப்பட்டது தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனால் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே 868 அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டுள்ளன. அதேபோல், மூடப்பட்ட அரசுப் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன.
மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். 207 பள்ளிகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன. இதற்கு முன் மூடப்பட்ட பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்தி திறக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கை இந்த ஆண்டும் தொடரும்.
அதனால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு மக்கள் நகரங்களை நோக்கிய இடப்பெயர்ந்ததும், 5 வயது நிரம்பிய குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததும் காரணம். மேலும், ஒரு சில பெற்றோர் தனியார் பள்ளியில் சேர்வதை பெருமையாக கருதுவதால், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்வியை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications