மாநகராட்சி கோயில்...மசூதி..தேவாலயம்...தரிசனத்துக்கு அனுமதி... முதல்வர் அறிவிப்பு!!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு இடையே சிறிது சிறிதாக தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இன்று முதல் சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களில் வரும் 10 ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்படலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்து இருப்பதை அடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் நீட்சியாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அடுத்த கட்ட பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததுள்ளது. கடந்த 5ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாடு மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 10000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியவற்றை 10.08.2020 முதல் திறக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாநகராட்சிகளில் உள்ள ஆட்சியரிடமும் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இத்துடன் தமிழ்நாட்டு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications