அலறும் மீனவர்கள்.. அடங்காத இலங்கை! கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கனும்.. மத்திய அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுத்திடுவதற்கு தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை 6.3.2025 அன்று அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது. முன்னதாக இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மேலும் கைது செய்யப்படுவதைத் தடுத்திட உடனடி தாதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கருக்கு இன்று (7.3.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6.3.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றுமொரு சம்பவம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர் , 2025ஆம் ஆண்டில், கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, இலங்கையில் தமிழக மீனவர்கள் நீண்ட காலத்திற்கு சிறை வைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சிறைவாசம். அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களுக்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்திற்கு உதவுக்கூடிய ஒரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர் எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுத்திடுவதற்கு தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்திடுமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications