டான்யாவுக்கு வீட்டுமனைப் பட்டா, வீடு கட்ட அனுமதி ஆணை.. நெகிழவைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி டான்யாவுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடு கட்டிக் கொள்ள அனுமதி ஆணையை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- செளபாக்கியம் தம்பதியரின் 8 வயது மகள் டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் குணமாகாமல் இருந்தது. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் பாதிப்பு குறையவில்லை. மாறாக சிறுமியின் ஒருபக்க முகம் சிதைவு மேலும் அதிகரிக்கத் தொடங்கி பாதிப்பு தீவிரம் அடைந்தது.

நாட்கள் செல்ல செல்ல டான்யாவின் முகம், வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவடைய தொடங்கியது. இதனால் குழந்தை டான்யாவின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களும் டான்யாவை அவருக்கு இருக்கும் குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர்.
டான்யாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க பெற்றோரிடத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளை உதவிடுமாறு முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க டான்யாவின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் சிறுமி டான்யாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்டம் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டான்யாவை சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டான்யாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக சிறுமி டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம்பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக் கொள்ள அனுமதி ஆணையும் முதலமைச்சர் இன்று நேரில் வழங்கினார். அப்போது, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் சிறுமி டான்யாவின் பெற்றோர் இருந்தனர்.
முக சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மகள் டான்யாவின் முகம் சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் சீரடைந்து விட்டது. தற்போது வசிக்க வீடுகட்ட இடமும் கிடைத்து விட்டதால் டான்யாவின் பெற்றோர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்சியுடன் நன்றி கூறினர்.












Click it and Unblock the Notifications