குற்றச்செயல்களுக்கு குட் பை சொல்லும் ‘சிற்பி..’ அரசுப் பள்ளிகளில் ஒரு அதிரடி.. முழு விவரம்
சென்னை: அரசுப் பள்ளிகளில் பல அதிரடியான திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று அரசுப் பள்ளிகளின் ஒழுக்கத்தைச் சீராக்கும் 'சிற்பி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாளை அரசுப் பள்ளி பிள்ளைகளுக்கு இலவச காலை உணவுத் திட்டம் செயலுக்கு வர உள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல்கள் வந்தபிறகு சமீப காலமாகப் பிள்ளைகளின் மனநிலை வன்முறை சார்ந்து ஈர்க்கப்படுவது அதிகரித்துள்ளது. நேரடியாக வன்முறைக் காட்சிகளைக் காணும் பிள்ளைகள் மனரீதியாக வன்முறைக்கு எளிதாகப் பழக்கிவிடுகிறார்கள். அதைத் தடுக்கத்தான் ;சிற்பி' திட்டம்.

அது என்ன ‘சிற்பி’?
'சிற்பி' என்றாலும் அது குறிக்கும் ஆங்கில விரிவாக்கம் வேறு. அதாவது Students in Responsible Police Initiatives என்பதன் சுருக்கம்தான் Sirpi.
இதன் தொடக்க விழாவில் இன்று கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், "வளரும் பருவத்திலேயே சிறார்களை நல்வழிப்படுத்துவது மூலம் ஒரு நல்ல தலைமுறையை உண்டாக்க முடியும். குற்றங்களைத் தடுப்பது என்ற நிலையிலிருந்து, குற்றங்களே நிகழாச் சூழலை உருவாக்குவது என்ற நிலையை நோக்கி நகர முடியும். அத்தகைய தலைமுறையைச் செதுக்கும் பொறுப்புணர்வு மிக்கத் திட்டம்தான் சிற்பி" என்று விளக்கம் அளித்தார்.

காவல்துறை
மேலும் அவர், "காவல்துறையை மக்களின் நண்பன் என்று சொல்லுகிறோம். அதற்கு ஏற்ப மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்" என்று விழா மேடையில் ஸ்டாலின் கூறிய போது அரங்கமே அதிர்ந்தது. அத்துடன் இந்தத் திட்டத்தின் பயிற்றுவிக்கப்படும் மாணவ, மாணவிகள் உடல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படாமல் பாதுகாப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

100 பள்ளிகள்
இந்தச் 'சிற்பி' திட்டத்தில் மாணவர்களை காவல்துறையினரின் முயற்சிகளில் ஈடுபடுத்தும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூபாய் 4.25 கோடி. சென்னையில் மட்டும் 100 பள்ளிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது ஒரு பள்ளியிலிருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்களை இதில் ஈடுபடுத்த உள்ளனர்.

பொது அறிவு
அவர்களை 8 சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று பொது அறிவு, வரலாற்று உணர்வு போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளை அளிக்க உள்ளனர். இதனால் ஏறக்குறைய 2764 மாணவர்களும் 2236 மாணவிகளுமாகச் சேர்த்து 5 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். இதனால் இளம் வயதிலேயே தவறான பழக்கங்களில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுக்க அரசு இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் செயல்படும் மாணவ, மாணவிகளுக்குத் தனியே சீருடையும் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications