மருத்துவமனையில் இருந்தாலும் ஓய்வின்றி பணி செய்யும் முதல்வர் ஸ்டாலின்.. உடல்நிலை எப்படி இருக்கிறது?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று (ஜூலை 27) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் எனத் தகவல் வெளியாகிள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதல் பரிசோதனைக்காக அடுத்த நாள் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார்.

3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 23 ஆம் தேதியன்று'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
24ஆம் தேதி காலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கூடுதல் பரிசோதனைகள், இதய துடிப்பை சீராக்குவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி.அனில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதய துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகளால் தலைச்சுற்றல் ஏற்பட்டதாக அடுத்தடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து இன்று 7வது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைப் வட்டார தகவலின்படி, சமீபத்தில் செய்யப்பட்ட ஆஞ்சியோகிராம் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது, எந்த அசாதாரணங்களும் கண்டறியப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அரசுப் பணிகள் மட்டுமல்லாது கட்சிப் பணிகளையும், மருத்துவமனையில் இருந்தபடியே மேற்கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து திமுக மண்டலப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 27) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் எனத் தகவல் வெளியாகிள்ளது. மருத்துவ சிகிச்சைகளைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தபடியே அரசு மற்றும் கட்சி பணிகளை செய்து வருகிறார். இன்று இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications