நீங்க தானே விஸ்வகுரு.. அமெரிக்க வரியால் திருப்பூர் தவிக்கிறது.. உடனே தீர்வு தேவை! ஸ்டாலின் தாக்கு
சென்னை: அமெரிக்காவின் வரியால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக திமுக கூட்டணி மிகப் பெரிய போராட்டத்தை திருப்பூரில் நடத்தியது. இதற்கிடையே இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி அடைந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுத் தீர்வை காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50% வரிகளை விதித்திருந்தார். கடந்த மாத தொடக்கத்தில் முதலாம் கட்ட 25% வரி அமலுக்கு வந்த நிலையில், அடுத்து 25% வரி கடந்த மாதம் இறுதியில் அமலுக்கு வந்தது. இப்படி மொத்தமாக 50% வரி விதிக்கப்பட்டதால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய சிக்கலாக அமைந்தது. இந்தியா அமெரிக்கா உறவுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடும் பாதிப்பு
இந்த வரி காரணமாக அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 40- 50% வரை குறையும் என அஞ்சப்பட்டது. குறிப்பாக ஜவுளித்துறையில் தான் பாதிப்பு மோசமாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. திருப்பூரில் பலரும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இது மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க வரி விதிப்பிலிருந்து தொழிலாளர்களைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் இன்று திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி"சார்பில் இன்று திருப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். திமுக மற்றும் திமுக கூட்டணி தலைவர்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தனர்.
ஸ்டாலின் தாக்கு
இதற்கிடையே இந்தப் போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாகக் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், இதனால் திருப்பூர் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி!
எந்த விதத்தில் நியாயம்?
பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள அமெரிக்க வரி காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது. குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?
விஸ்வகுரு நீங்க தானே
நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, விஸ்வகுரு எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்! இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி!" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாகச் சொல்லியே டிரம்ப் வரிகளை விதித்திருந்தார். அதாவது ரஷ்ய எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு வாங்கி அதைச் சுத்திகரித்து இந்தியா வெளிநாடுகளுக்கு விற்கிறதாம். ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதாலேயே உக்ரைன் போரை ரஷ்யா தொடர்வதாகவும் டிரம்ப் தரப்பு கூறுகிறது. இருப்பினும், இதை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. மேலும், ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் கூட ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நிலையில், அவர்கள் மீது வரி விதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications