பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டாத 1991-1996 அதிமுக ஆட்சி! வாச்சாத்தி வன்கொடுமை பற்றி காங்கிரஸ் வேதனை!
சென்னை: 1991 -1996 அதிமுக ஆட்சியில் பழங்குடியின பெண்களைப் பாதுகாக்க அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு அதிகாரிகளை பாதுகாக்கவே முனைப்பு காட்டப்பட்டதாக தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் சாடியுள்ளார்.
பெண்ணினத்தைத் தலைகுனிய வைத்த பழங்குடியின மக்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமைக்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மிக,மிகக் காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பு என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''அதிமுக ஆட்சியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 குற்றவாளிகளுக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வழங்கியிருக்கிறது.
அன்றைய அதிமுக ஆட்சியில் பழங்குடியின பெண்களைப் பாதுகாக்க அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு அதிகாரிகளை பாதுகாக்க முற்பட்டதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வனத்துறையினர். காவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் அந்த கிராமம் முழுவதையும் திடீர் சோதனை நடத்தி வன்முறை தாக்குதல் நடத்தினர் அதோடு பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்த வரலாறு காணாத கொடுமைக்கு இன்றைக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
இந்த தீர்ப்பை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்குத் தலைவணங்குகிறோம். பாராட்டுகிறோம். இந்த பழங்குடி இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உட்பட வனத்துறையினர். காவல் துறையினர்.வருவாய்த்துறையினர் என்று 259 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். "குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்" என 2011 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பில் மேல்முறையீடு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குகிற போது, குற்றஞ்சாட்டப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே பெண்ணினத்தைத் தலைகுனிய வைத்த பழங்குடியின மக்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமைக்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மிக,மிகக் காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பாகும். இது நீதி பரிபாலன முறைக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க தலைமை நீதிபதி உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications