வெளியே சொல்லவே முடியாத விரக்தியில் காங்.- திமுக தருவதாக சொன்ன தொகுதிகள் எண்ணிக்கை இத்தனைதானாம்!
சென்னை: மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவைப் போல தமிழ்நாட்டிலும் காங்கிரஸுக்கு சொற்பமான இடங்களைத்தான் தர முடியும் என் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக திட்டவட்டமாக தெரிவித்திருப்பது அக்கட்சியை கடும் விரக்தி அடைய வைத்துவிட்டதாம்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவில் முறிவடைந்தது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து காங்கிரஸை தனிமைப்படுத்திவிட்டன. இதன் உச்சமாக "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே, ஒட்டுமொத்தமாக கூட்டணியையே உதறி தள்ளிவிட்டு பாஜக பகக்மே போய்விட்டார்.

திமுக பேச்சுவார்த்தையில் பகீர்: இந்த பின்னணியில் தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நேற்ரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக கூட்டணியில் 15 தொகுதிகள் கேட்பது என்பது காங்கிரஸாரின் கருத்தாக இருந்தது. ஒரு கட்டத்தில் 18 தொகுதிகள் கேட்போம் என சொல்லி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். திமுகவுடனான நேற்றைய பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் பரவின. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதனை அவசரம் அவசரமாக மறுத்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இத்தனை தொகுதிகள் மட்டும்தானா?: இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 4 தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என திமுக தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. அதுவும் நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள்தான் என திட்டவட்டமாகவும் தெரிவித்ததாம் திமுக. இதனை எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மிக அதிகபட்சமாக திண்டுக்கல், கரூர் தொகுதிகளை உள்ளடக்கி 6 முதல் 7 இடங்கள்தான் கிடைக்கும் என்பது திமுகவின் திட்டவட்டமான நிலைப்பாடு. 15,18, 21 என ஒரேடியாக கற்பனையில் மிதந்து கொண்டிருந்த காங்கிரஸுக்கு அறிவாலயம் தந்த பதில் ரொம்பவேஅதிருப்தி அடைய வைத்துவிட்டதாம். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் நொந்து நூலாகிப் போயுள்ளனராம். திமுக கொடுக்கும் 6 அல்லது 7 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு வெல்வதற்கான வாய்ப்புகளை பார்ப்பதா? அல்லது கவுரவம்.. கவுரவம்னு பார்த்து அடுத்த கட்ட முடிவை எடுப்பதா? என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications