எல்லாம் ஏமாற்று பேச்சு.. அமித்ஷா பேச்சை தமிழக மக்கள் ஏற்க மாட்டாங்க.. தட தடக்கும் திருமாவளவன்
சென்னை: தமிழரை பிரதமர் ஆக்குவோம் என அமித்ஷா பேசியுள்ளது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். அமித்ஷாவின் ஏமாற்று பேச்சை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று தமிழ்நாடு வருகை தந்தார். நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அங்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முக்கிய பிரமுகர்களை அமித்ஷா சந்தித்து பேசினார்.
இன்று காலை சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தென் சென்னை மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பாஜகவினர் எப்படி பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

அப்போது அமித்ஷா கூறும் போது, "சென்னை விமான நிலையத்தில் இருந்து நான் வெளியே வந்த போது மின்சாரம் தடைபட்டது. இந்த இருளைக் கண்டு அச்சப்பட வேண்டியது இல்லை. இந்த மின் தடை, திமுக ஆட்சியில் தமிழகம் இருள் சூழ்ந்துள்ளது என்பதையே காட்டுகிறது. அந்த இருளை விரட்டி விரைவில் நாம் ஒளியேற்றுவோம். தமிழ் நாட்டில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு இன்று முதலே நாம் அனைவரும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வர வேண்டும். ஒரு காலத்தில் தமிழகத்தில் இரண்டு பேருக்கு அந்த வாய்ப்பு இருந்தது.
ஆனால் அது நடக்கவில்லை. இதற்கு திமுகதான் காரணம். வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு சாதாரண தொண்டன் பிரதமராக வருவதற்கு உழைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. தமிழர்கள் பிரதமர் ஆகும் வாய்ப்பை இழந்ததற்கு திமுக காரணம் என்று அமித்ஷா கூறியிருப்பது அவருக்கு தமிழக அரசியல் வரலாறு தெரியவில்லை என்பதை காட்டுவதாக கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழரை பிரதமர் ஆக்குவோம் என அமித்ஷா பேசியதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், "தமிழரை பிரதமர் ஆக்குவோம் என அமித்ஷா பேசியுள்ளது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். அமித்ஷாவின் ஏமாற்று பேச்சை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications