ஜாமீன் நிபந்தனைகள்.. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு போலீசுக்கு முக்கியமான சுற்றறிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் ஜாமின் நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என்கிற தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்.
குற்ற வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றவர் அதன் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என உயர் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, ஜாமீனை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மார்ச் 30ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இதுபோன்று நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டாம் நிலை காவலர் அந்தஸ்துக்கு குறையாத ஒருவரை என நியமிக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கவனத்திற்கு கொண்டு வந்து ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும் படியும் அறிவுறுத்தி இருந்தார்.
இதன் அடிப்படையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஏப்ரல் 3ஆம் தேதி தமிழக டிஜிபி-க்கு எழுதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு தலைமை வழக்கறிஞரின் கடிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சில விதிகளை வகுத்து அனைத்து காவல்துறை ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், ஒவ்வொரு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கொண்ட ஒரு பதிவு பதிவேட்டை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பராமரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவற்றை கையாளுவதற்காக இரண்டாம் நிலை அல்லது முதல் நிலை காவலர் அல்லது தலைமை காவலர் அந்தஸ்திலான ஒருவரை ஒவ்வொரு காவல் நிலையத்தில் நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகள் நிறைவேற்றாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்புடைய அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஜாமீன் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications