தமிழகத்தில் மழை பெய்யுமா.. வெயில் வெளுக்குமா.. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு இதுதான்!
சென்னை: வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 சென்டிமீட்டரும், சாத்தான்குளம் மற்றும் நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் 2 சென்டிமீட்டரும், ராதாபுரம் மற்றும் பேச்சிப்பாறையில் 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக கேரளாவில் இன்று முதல் 8-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து பேரிடர் மேலாண்மை இயக்கத்தினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.