"கிங் மேக்கராகும்" விஜய்.. சைலெண்டாக தூதுவிடும் அதிமுக? தமிழகத்தில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கு!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகிறது. நேற்று முதலே எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், இது மாநில அரசியலில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளன. இதற்கிடையே அதிமுக தரப்பில் இருந்து தவெக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியாவிட்டால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை 'ஆக்சிஸ் மை இந்தியா' (Axis My India) வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சியான திமுகவிற்கு நிகராக இடங்களைப் பிடிக்கும் என்ற கணிப்பு பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிலர் சர்வே முறைகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் கூட இந்த எக்ஸிட்போல் பெரும் புயலையே கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு தேர்தல்
234 தொகுதிகளைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள், கோட்டை யாருக்கு என்பதில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களைக் கைப்பற்றும் என்று ஆக்சிஸ் மை இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. இது திமுக தலைமையிலான கூட்டணிக்குக் கணிக்கப்பட்டுள்ள 92 - 110 இடங்களை விட அதிகம் என்பதுதான் இப்போதைய பரபரப்பு.
ஆளுங்கட்சிக்கு இணையாக விஜய் கட்சி 35 சதவீத வாக்குகளைப் பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அதிமுக கூட்டணி சுமார் 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில், விஜய்க்கு 37 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 35 சதவீத ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
விஜய்
விஜய்க்கு மிகப் பெரிய பலமாக இளைஞர்கள் மாறியுள்ளனர். 18-19 வயதுடைய முதல்முறை வாக்காளர்களில் 68 சதவீதத்தினர் விஜய்க்கு வாக்களித்துள்ளதாக அந்த சர்வே கூறுகின்றன. மேலும், 20-29 வயதுடையவர்களில் 59 சதவீதத்தினரும் விஜய்யைத் தேர்வு செய்துள்ளனர். மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் தாண்டி, ஓபிசி, எஸ்சி மற்றும் சிறுபான்மையின மக்களிடமும் தவெகவுக்கு ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு
அதாவது இளைஞர்களின் முழு ஆதரவு விஜய்க்கு இருப்பதாகவும் இதனால் அவரே ஆட்சியைப் பிடிப்பார் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. வேறு சில சர்வேக்களிலும் விஜய் கணிசமான இடங்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் விஜய் கிங் மேக்கராக மாறுவார். அவர் யாருடன் கூட்டணி அமைக்கிறார் என்பது கவனம் பெறும்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே அதிமுக தனது அடுத்தகட்ட நகர்வாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறார் என்பதைப் பொறுத்தே, அந்தப் பேச்சுவார்த்தையில் அவரது பங்கு என்ன என்பது தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு 84.69% வாக்குகள் பதிவாகி இருந்தது. மாநிலத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் குறைந்தது 118 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்!












Click it and Unblock the Notifications