திமுக 98 - அதிமுக 91.. தவெக – நாம் தமிழர் எவ்வளவு? தந்தி டிவி கருத்து கணிப்பில் பெரிய ஷாக்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு ? என்பது தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்புகள் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் தேர்தல் கள நிலவரம் என்ன? என்பது பற்றி தந்தி டிவி சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தந்தி டிவி சார்பில் மார்ச் 29 ம் தேதி ஏப்ரல் 20ம் தேதி வரை இந்த கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தொகுதி வாரியாக வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் தான் முழுமையான கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
எந்த கட்சிக்கு எவ்வளவு?
அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 98 தொகுதிகளில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி 91 தொகுதிகளில் எளிமையாக வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தவெக 2 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரம்பூர் தொகுதியில் விஜய் எளிதாக வெல்வார் என்றும், திருச்சி கிழக்கில் கடும் போட்டி இருந்தாலும் கூட இறுதியில் விஜய் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
43 தொகுதிகளில் கடும் போட்டி
அதேவேளையில் நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 43 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த 43 தொகுதிகள் தான் தமிழகத்தின் ஆட்சியை நிர்ணயம் செய்ய உள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மெஜாரிட்டி இல்லை
தமிழகத்தை எடுத்து கொண்டால் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் தந்தி டிவி கருத்து கணிப்பில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தற்போதைய கருத்து கணிப்பின்படி திமுக 98, அதிமுக 91 தொகுதிகளில் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது. 43 தொகுதிகளில் இழுபறி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தான் காரணம்
இந்த இழுபறிக்கு அரசியலுக்கு புதிய வருகையாக வந்துள்ள விஜயின் தவெக தான் முக்கிய காரணம். ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான அளவுக்கு தவெக வாக்குகளை பிரிப்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 43 தொகுதிகளில் அதிக இடங்களை வெல்லும் கூட்டணிக்கு தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது கருத்து கணிப்பு மட்டும் தான். தமிழக மக்கள் என்ன மாதிரியான மனநிலையில் ஓட்டளித்துள்ளனர்? என்பதை அறிய நாம் ரிசல்ட் தேதியான மே 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications