தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அசத்தல் நியூஸ்! இனி இ.பி. ஆபிஸுக்கு போங்க! ஆனா லைன்ல நிற்காதீங்கள்
சென்னை: கியூ ஆர் கோடு மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மின் வாரிய அலுவலகத்திற்கு போய் கட்டணத்தை செலுத்த வேண்டிய காலம் இருந்த நிலையில் தற்போது வீட்டிலிருந்தே கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கியுள்ளது. மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் அப்போதெல்லாம் மின்சார வாரிய அலுவலகத்தில் வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருந்தது.

இதைத் தொடர்ந்து இணையதள வசதி வந்ததும் ஒவ்வொரு சர்வீஸ் எண்ணிற்கும் யூசர் நேம், பாஸ்வேர்டு தரப்பட்டது. இதை வைத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.
இதனால் மீட்டரை பார்த்து கார்டில் என்ட்ரி போட வேண்டிய வேலையே இல்லை. நாம் பயன்படுத்திய யூனிட்கள் ஆன்லைனில் ஏறிவிடும். அதை வைத்து நாம் பணம் செலுத்தி வருகிறோம். டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் Tangedco இலச்சினை மற்றும் பச்சை குறியீடு ✅ இருக்கும். மேலும் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் வரும். அதில் View Bill, Pay bill என வரும். முதலில் வியூ பில்லை கிளிக் செய்தால் உங்கள் மின் கட்டணம் பிடிஎஃப்பில் டவுன்லோடு செய்யலாம்.
அந்த கட்டணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு pay bill என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் போன் பே, கூகுள் பே என எது வேண்டுமோ அதை ஓபன் செய்து பணத்தை செலுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) உங்கள் மின்சாரக் கட்டணம் தயாராக இருக்கும்போது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பும். பில்லை பார்க்கலாம், செலுத்தலாம் என தமிழ்நாடு வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை நெட்பேங்கிங், பாரத் பில் பேமென்ட் சேவை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அது போல் மின் வாரிய அலுவலகங்களில் கியூ ஆர் கோடு வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மின் கட்டணத்தை தற்போது 83 சதவீதம் நுகர்வோர் மின்னணு முறையில் செலுத்துகிறார்கள்.
கடந்த 2023- 2024 ஆம் ஆண்டில் மின்னணு முறையில் செலுத்தப்பட்ட கட்டணம் மூலம் ரூ 50,217 கோடி வருவாய் கிடைத்தது. முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகம் ஆகும். குறிப்பாக தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயர் அழுத்த பிரிவு மின் நுகர்வோர் அனைவரும் மின் கட்டணத்தை மின்னணு முறையிலேயே செலுத்துகிறார்கள்.
தவிர கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி நினைவூட்டல் செய்யப்படுகிறது. அது போல் கட்டணம் செலுத்தியதும் அதை உறுதி செய்து நுகர்வோருக்கு தகவல் அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் மாதத்திற்கு 3 கோடி எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில் கியூ ஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications