அட நீங்க வேற.. தமிழக மின்சார வாரியம் சுத்தமான அமைப்பு.. அதானி ஊழலுடன் தொடர்பு இல்லை: செந்தில் பாலாஜி
சென்னை: அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மின்சார வாரியங்களுக்கு சோலார் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானி, அவரது சகோதரர் உள்பட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மேலும் இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி விளக்கம்: இதற்கிடையே இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியதாவது:-
நானும் சோசியல் மீடியா மற்றும் சில செய்திகளில் பார்த்தேன். அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளில் பல மாநிலங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் தமிழ்நாடு மின்சாரத்துறையும் சேர்க்கப்பட்டு சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியிலான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சந்தேகம் இருந்தால்: மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசில் இருக்கும் மின்சாரத் துறையின் அமைப்புகளோடு 1800 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தோடு தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேட் இந்தியா என்ற நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்துள்ளது. இது மத்திய அரசினுடைய நிறுவனம்.
சோலார் எனர்ஜி கார்ப்பரேட் இந்தியா என்ற நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதுவும் மிக குறைந்த விலையில் 2 ரூபாய் 61 பைசாவுக்கு கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மிக மிக குறைந்த செலவு ஆகும். அதிமுக ஆட்சியில் 7 ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் சந்தேகம் இருந்தால் என்னிடமோ, இல்லை எங்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: அதானி மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்ட்டு இந்திய அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பாஜக மறுப்பு: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது. பாஜக கூறுகையில், அதானி குழுமம் மீது அமெரிக்கா முன்வைத்து இருக்கும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு மாநிலங்கள் (தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர்) பாஜக ஆட்சி நடைபெறவில்லை. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே சத்தீஷ்கர் மற்றும் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ளன.
பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே அதானி குழுமமும் தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications