2023-24 தமிழ்நாடு பட்ஜெட்.. 3வது முறையாக தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும்
சென்னை: 2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.
திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காகிதம் இல்லா பட்ஜெட்
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும். 3வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டசபையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டிற்கான தொடர் ஏற்கனவே ஜனவரி 9ம் தேதி தொடங்கிவிட்டது. அதனால் இன்று ஆளுநர் ஆர். என் ரவி உரை இருக்காது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.

கூட்டம்
இந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். பட்ஜெட் மீது இதில் விவாதம் நடத்தப்படும். பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று இதில் முடிவு எடுக்கப்படும். இன்று தொடங்கும் பேரவை பெரும்பாலும் அடுத்த 5 -6 நாட்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த முறை வழக்கத்தில் உள்ளது.

நாளை வேளாண் பட்ஜெட்
இந்த நிலையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 21-ம் தேதி தாக்கல் செய்கிறார். அதன்பின் 27ம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 23ம் தேதியில் இருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் திட்டம் தொடர்பான அறிவிப்பு இன்று வர உள்ளது. இந்த திட்டம் இன்று தொடங்கப்பட வாய்ப்பு இல்லை. பெரும்பாலும் ஜூன் மாதமே தொடங்கப்படும். ஆனால் ஜூன் மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும்.

சிலிண்டர்
பல முக்கியமான திட்டங்கள் குறித்தும் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ100 வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் இன்று வெளியாகலாம். பல துறைகளில் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக இளைஞர்களை கவரும் திட்டங்கள், பெண்களை கவரும் அறிவிப்புகள், அரசு ஊழியர்களை கவரும் அறிவிப்புகள் பல இன்று இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்னொரு பட்ஜெட் இருந்தாலும் இந்த வருடமும் தேர்தலை மனதில் வைத்து சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications