பச்சை பசேலென மாறும் சென்னை IT ஏரியா! சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற வனம்! டெண்டர் கோரிய வனத்துறை
சென்னை: சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ரூ.5 கோடியில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழ்நாடு வனத்துறை டெண்டர் கோரியுள்ளது. நகர்ப்புற வனத்தில் குளங்கள், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், பூந்தோட்டம் ஆகியவை அமைய உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் நகர்ப்புற வனம் அமைய உள்ளது.
நகரங்கள் வளர வளர, மரங்கள் குறைந்து வருகின்றன. நாள்தோறும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்களின் பெருக்கம் காரணமாக சுற்றுச்சூழல் அதிகளவில் மாசடைகிறது. இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. ஐ.டி நிறுவனங்களின் வருகையால் கான்கிரீட் காடாக உருவெடுத்துள்ளது சிறுசேரி. இந்நிலையில், சிறுசேரியில் சிப்காட் அருகிலேயே நகர்ப்புற காடுகளை உருவாக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் வனத்துறை இணைந்து சிறுசேரி சிப்காட் அருகே ராஜிவ்காந்தி சாலை ஓரம் 50 ஏக்கரில் பிரமாண்டமான நகர்ப்புற வனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நகர்ப்புற வனத்தில் குளங்கள், மணல் குன்றுகள், நடைபாதை, சைக்கிள் பாதை, விளக்க மையம், பண்ணைத் தோட்டம், மருத்துவ தோட்டம், குழந்தைகள் விளையாடும் இடம், பூந்தோட்டம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் சிறுசேரியில் நகர்ப்புற வனத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நகர்ப்புற வனம் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. தற்போது இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற வனம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், (GFX) சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில் அமையவுள்ள நகர்ப்புற வனத்தில், குளங்கள், மணல் குன்றுகள், சைக்கிள் பாதை, நடைபாதை, விளக்க மையம், நர்சரி, தோட்டம், அமரும் இடம், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்தவெளி உடற்பயிற்சி இடம், மருத்துவ தாவரங்கள் கொண்ட தோட்டம், பூந்தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்டவைகள் இடம்பெறவுள்ளன.
சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நகர்ப்புற வனத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறை, இதனை 5 கோடி செலவில் உருவாக்க டெண்டர் கோரியுள்ளது. சிறுசேரி சிப்காட் பகுதியில் நகர்ப்புற வனம் உருவாக்கப்பட உள்ளது ஐ.டி ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிறுசேரி நகரப்புற வனம் அமைப்பதற்கான இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 12 ஆம் தேதி வரை டெண்டர் ஆவணங்களை பதிவிறக்கிக் கொள்ளலாம். டெண்டர் கோருவதற்கான கடைசி நாள் நவம்பர் 12 மாலை 4.30 மணி. விலைப்புள்ளி திறக்கும் நாள்: நவம்பர் 13 மாலை 5 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications