முழு ஊரடங்கு.. வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் தொடரும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் தொடரலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மக்களை கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. தமிழகத்திலும், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை மீறி எப்போதோ சென்றுவிட்டது. மக்கள் பல்வேறு மாவட்டங்களில் படுக்கை வசதி இன்றியும், ஆக்சிஜன் வசதி இன்றியும் அல்லாடி வருகின்றனர்.
இந்த சூழலில், கொரோனா முதல் அலையின் போது லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது போன்று, தற்போது உச்சத்தில் இருக்கும் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர, தமிழக அரசு முழு லாக் டவுன் அறிவித்துள்ளது.

இரு வாரங்களுக்கு
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தடை விதிப்பு
மேலும் அவரது உத்தரவில், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஜைக்கு அனுமதி
குறிப்பாக, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை என்றும் குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் வேண்டுகோள்
"கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications