"ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு இலக்கு.." சென்னையில் தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு! ஏன் முக்கியம்
சென்னை: தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலேயே முதலீட்டாளர்களை அதிகம் கவரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் ஜிடிபி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அதேநேரம் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர் மாநாடு: இத உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தவும் பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில காலமாகவே தீவிரமாக நடந்து வந்தது. இந்தச் சூழலில் தான் உலக முதலீட்டாளர் மாநாடு இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முதலீட்டாளர்களை வரவேற்றுப் பேசுகிறார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஜப்பான், என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ரூ.5.5 லட்சம் கோடி: இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதற்கு இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான தமிழ்நாட்டின் பார்வை என்ற ஆய்வறிக்கையும் வெளியிடப்படுகிறது.
இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்வர் முன்னிலையில் நடக்க உள்ளது. மேலும், இந்த மாநாட்டில் ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்களின் எதிர்காலம், வேளாண்மை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல தலைப்புகளில் தனியாக அமர்வுகள் நடைபெற உள்ளன. மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்கும் தனியாக அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புது முதலீடுகள்: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள் செய்யவுள்ள முதலீடுகள் குறித்த செய்திகள் வெளியாகி வந்தன. குறிப்பாக அடிடாஸ் நிறுவனம் சீனாவுக்கு வெளியே தனது முதல் தொழிற்சாலையைத் தமிழகத்தில் தொடங்குகிறது. அதேபோல VinFast என்ற மின்சார வாகன தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருக்கிறது. ரூ.16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் வின் ஃபாஸ்ட் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்கிறது.
மேலும், வழக்கமாக புதிய முதலீடுகள் எப்போதும் சென்னையைச் சுற்றியே இருக்கும். ஆனால், இந்த முறை தென்தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வார்த்த மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications