மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்.. அரசின் நிலைப்பாடு இதுதான்! கர்நாடகாவுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
பெங்களூர்: மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டுவோம். அங்கு அணை கட்டுவோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆணித்தரமாக கூறியுள்ள நிலையில் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் மேகதாது பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.
ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே ஓடும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகளை டிகே சிவக்குமார் தொடங்கி உள்ளார். டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் ராமநகர் என்பது அவரது சொந்த மாவட்டம் ஆகும்.

இதனால் தான் துவக்கம் முதலே மேகதாது அணை கட்டுவதில் டிகே சிவக்குமார் அதிக ஆர்வத்துடன் உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்காக அவர் நடைப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது கர்நாடகா மாநில நீர்ப்பாசனத்துறையையும் அவரே நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் பெங்களூரில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மேகதாது அணை தொடர்பாக துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டத்தில் ஒன்று மேகதாது அணை. அதேபோல் மகதாயி திட்டமும் ஒன்று. இதுதொடர்பாக விரைவில் மத்திய அமைச்சரை சந்திப்பேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை'' என்றார்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராமல் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்ப தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் எனவும், அண்டை மாநிலத்தை சீண்டி பார்க்க வேண்டாம் எனவும் அவர் டிகே சிவக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டிகே சிவக்குமாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் . மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications