கொத்து கொத்தாக கொரோனா கேஸ், லாக்டவுன் போட்ட நாடுகள்.. தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு ரத்து ஏன்?
சென்னை: உலகம் முழுக்க கொரோனா பரவல் அதிகரித்து பல நாடுகளும் லாக்டவுனை நோக்கி ஓடும் நிலையில்தான், தமிழகத்தில் நர்சரி மற்றும் மழலை பள்ளிகள் திறப்பு முடிவை கைவிட்டுள்ளது தமிழக அரசு.
Recommended Video
தமிழகம் உட்பட நாடு முழுவதும், கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 மதுல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியது.
ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அரசு அறிவித்து, நவம்பர் 1ம் தேதி முதல் எல்.கே.ஜி. யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் ப்ளே ஸ்கூல் என்ற மழலையர் பள்ளிகளையும், 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்தது. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள் திறப்பு ரத்து
ஆனால் இன்று வெளியிட்ட தமிழக அரசின் அறிவிப்பில், நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என்றும் தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என்றும், மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில்தான் தமிழக அரசு இது போன்ற ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது நிலவரம் எப்படி இருக்கிறது? இதோ ஒரு ரவுண்ட் அப்.

ரஷ்யா நிலவரம்
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் இறப்புகள் தினசரி 1,028 ஆக உயர்ந்தன, 34,073 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. எனவே, அங்கு, அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையிலான "வேலை செய்யாத நாட்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வேலைக்கு போகாவிட்டாலும் சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் தொற்றுநோயியல் நிலைமை வித்தியாசமாக உருவாகிறது என்பதால், அதற்கேற்ப கெடுபிடிகள் விதிக்கப்படும் என்று அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.

சீனா
சீனா செவ்வாயன்று இரண்டு வடக்கு எல்லைப் பகுதிகளில் லாக்டவுனை விதித்தது. ஷான்க்சி மாகாணத்தின் வடமேற்கு நகரமான சியான் நகரில் 9 புதிய கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே அந்த பிராந்தியத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது சீனா. 9 கேசுக்கெல்லாம் லாக்டவுனா என நினைக்க வேண்டாம். சீனா 9 கேஸ்கள் பதிவாகியுள்ளதாக லாக்டவுன் போட்டால் அங்கே அதை விட பல மடங்கு கேஸ்கள் பதிவாகியிருக்கிறது என்று அர்த்தம்.

நியூசிலாந்து
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திங்கள்கிழமை, தங்கள் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்தார். கடுமையான லாக்டவுன் மற்றும் எல்லை மூடல்கள் இருந்தபோதிலும் ஆக்லாந்து மற்றும் அண்டை பகுதிகளில் பரவிய டெல்டா வைரஸ் பிரச்சினையால் நியூசிலாந்து தடுமாறிக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர் புதன்கிழமை கோவிட் -19 தடைகளை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்தது, ஏனெனில் தினசரி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை 3,994 ஐ எட்டியது. சிங்கப்பூரின் 50 லட்சம், மக்கள்தொகையில் 80% க்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டிருந்தாலும், அறிகுறியற்ற அல்லது லேசான கேஸ்கள் சீராக அதிகரித்து, வைரஸைப் பரப்பி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லாட்வியா
லாட்வியா கோவிட்-19 லாக்டவுனை அக்டோபர் 21 முதல் நவம்பர் 15 வரை அறிவித்தது. "எங்கள் சுகாதார அமைப்பு ஆபத்தில் உள்ளது ... இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரே வழி தடுப்பூசி போடுவதுதான்" என்று அவசர அரசு அதிகாரிகள் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் கிரிஸ்ஜானிஸ் கரின்ஸ் கூறினார். குறைந்த தடுப்பூசி விகிதங்கள்தான், நோயாளிகள் பெரிய பாதிப்போடு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான காரணம் என்று அந்த நாட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அயர்லாந்து
2020ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறகு முதல் முறையாக இரவு விடுதிகளை மீண்டும் திறக்க அயர்லாந்து அனுமதித்தது அயர்லாந்து. உலகிலேயே அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஒன்று அயர்லாந்து. ஆனால், அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடும் திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது அந்த நாடு. 18 வயதுக்கு மேட்பட்டோரில் 92% தடுப்பூசி செலுத்திய நாடு அயர்லாந்து. ஆனால், கடந்த 14 நாட்களில் 100,000 நபர்களுக்கு 400 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் அதிக தொற்று விகிதங்களை கொண்ட நாட்டில் ஒன்றாக உள்ளது அயர்லாந்து.

இங்கிலாந்து
கொரோனா பரவல் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு குறித்து பிரிட்டன் அச்சத்தில் உள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளார், சமூக விலகல் நடவடிக்கைகள் மற்றும் முககவசம் கட்டாயம் என்ற உத்தரவுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். பூஸ்டர் ஷாட்கள் உள்ளிட்டவற்றை செலுத்த பிரிட்டன் ரெடியாக உள்ளது. ஆனால் கேஸ்கள் அதிகரிப்பதால் குளிர்காலத்தில் லாக்டவுனை போட வேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பல்கேரியா
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளால் நாடு திணறி வருவதால், உணவகங்கள், திரையரங்குகள், ஜிம்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு செல்ல ஹெல்த் பாஸ் அவசியமாகும். தடுப்பூசி போடப்பட்டதைக் காட்டும் டிஜிட்டல் அல்லது காகிதச் சான்றிதழ் காண்பிக்கப்பட வேண்டும். கொரோனா நெகட்டிவ் அல்லது சமீபத்தில் வைரஸிலிருந்து மீண்டு வந்ததற்கான சான்றிதழையும் காட்டலாம். இப்படியான நிலையில்தான், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications