கேஸ் சிலிண்டர் விலையை விடுங்க.. திடீர்னு உயர்ந்த அரிசி விலை.. விழிபிதுங்கும் டெல்டா.. என்ன காரணம்?
சென்னை: திடீரென அரிசி விலை உயர்ந்துள்ளது.. கடந்த 6 மாதங்களில், ரூ.35 க்கு விற்கப்பட்ட அரிசிகள், இப்போது 50 க்கு விற்பனையாகின்றன. இதற்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களாகவே, காய்கறிகளின் விலை உச்சத்திற்கு எகிறி கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், மக்களின் அன்றாட உணவுக்கு பயன்படும், அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது, சாமான்ய மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

அரிசியின் விலை, சில மாதங்களாகவே உயர்ந்துவந்த நிலையில், இப்போது இன்னும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன..
பருமழை: பருவமழை காரணம் என்கிறார்கள்.. மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அதேபோல, பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை, 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதும், இந்த விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனாலேயே அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துவிட்டதாகவும் தஞ்சை, நாகை மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் காரணம் கூறுகிறார்கள்.
குறுவை விளைச்சல்: அதுமட்டுமல்ல, கர்நாடக அரசு உரிய காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்காததால், குறுவை விளைச்சல் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது..

கர்நாடகாவிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரும் அரிசி லோடுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறதாம். அதனால்தான், கர்நாடக பொன்னி, மைசூர் பொன்னி அரிசிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 வீதம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்துள்ளது. இப்போதைய நிலைமையே தொடர்ந்தால் அரிசியின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்..
பருவமழை: தற்போது, பருவமழை தொடங்கி உள்ளதால், விரைவில் இந்த கலக்கம் தீரும் என்றும் நம்பப்படுகிறது என்றாலும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய உணவுப்பொருட்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications