பஸ்ல "இதுக்கு" இனி அனுமதி கிடையாது.. தமிழக அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர்களுக்கு போன உத்தரவு? ஏன்?
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், புதிய உத்தரவு ஒன்றினை தமிழக அரசு போக்குவரத்து கழகம் பிறப்பித்திருக்கிறது. அது என்ன?
லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
பல இடங்களில் அரசியல் கட்சிகள் படங்கள், போஸ்டர்கள், பேனர்கள், உடனடியாக அகற்றும் பணிகள் ஆரம்பமாகின.. அத்துடன் தலைவர்களின் உருவச்சிலைகளை துணிகளால் மறைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.

அதிரடி அறிவிப்பு: நேற்றைய தினம், இந்தியத் தேர்தல் ஆணையத்திலிருந்து, தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேர்தல் நடத்தை விதிகள் பல இடங்களில் பின்பற்றப்படாதது குறித்து சுட்டிக்காட்டியிருந்தது.
குறிப்பாக, "விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசுப் பேருந்துகள், மின்சாரம், தொலைபேசி கம்பங்கள், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடம் போன்ற பொது மற்றும் தனியார் இடங்களிலும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள், சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், காகிதங்கள், கட்அவுட்கள், பேனர், கொடிகள் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது.
அரசு பஸ்கள்: இதையடுத்து, அரசு பஸ்களிலும் அதிரடி காட்டப்பட்டுள்ளது. அதாவது, அரசு பஸ்களில் பார்சல்களை அனுப்பும் குத்தகையை தனியார் நிறுவனம் எடுத்துள்ள நிலையில், கண்டக்டரிடம் கட்டணம் செலுத்தி, பார்சல்களை அனுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், நகரங்கள் இடையே ஆட்கள் இல்லாமலே பார்சல்களை அனுப்பும் வழக்கமும் உள்ளது.. ஆனால், இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு பஸ்களின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி தேர்தல் கமிஷன், போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட்டது.
புதிய உத்தரவு: எனவே, அரசு பஸ்களில் ஆளில்லாமல் பார்சல்களை அனுப்பக்கூடாது என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துவிட்டார்களாம்.
எனினும், பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லலாம்.. பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறவேண்டும்.. ஆனால், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை கையிலோ, டூவீலர்களிலோ, காரிலோ அல்லது வேறு ஏதேனும் வாகனங்களிலோ கொண்டு செல்லும்போது, போலீசார் தடுத்து நிறுத்தினால் அதற்கான ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்த கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
வருமான வரித்துறை: அதுமட்டுமல்ல, ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications