நீட் தேர்விற்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.. என்ன நடக்கும்?
சென்னை: நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட தமிழ்நாடு அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது.
அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.

நீட் தேர்வு
அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் ரவி மீண்டும் இதில் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள், ஆளும் கூட்டணி தலைவர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதோடு ஆளுநர் ஆர். என் ரவி பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த மோதலை தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பினார்.

ஆளுநர் ரவி
நீட் நுழைவு தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதா இன்னும் டெல்லியில் நிலுவையில்தான் உள்ளது. இந்த மசோதா ஒருவேளை திருப்பி அனுப்பப்பட்டால் இந்த நீட் விலக்கு சாத்தியம் இல்லாமல் போகும். இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கான நீட் தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.

வழக்கு
இந்த நிலையில்தான் நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட தமிழ்நாடு அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது. கடந்த அக்டோபர் 13-ந்தேதி நடந்த விசாரணைக்கு பின் தற்போது மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது. நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளதால் கடந்த முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த முறை தமிழ்நாடு அரசு வாதத்தில், நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளது. அதனால் இதை விசாரணை செய்ய கூடாது. 12 வாரங்கள் வழக்கில் அவகாசம் வேண்டும். அதன்பின் விசாரணை செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

பின்னணி
இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அமர்வு இன்று விசாரிக்கிறது. ஆனால் குடியரசுத் தலைவர் இன்னும் இந்த சட்ட மசோதா மீது முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2023ம் ஆண்டிற்கான நீட் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டான். அதன்படி 2023ம் ஆண்டு மே 7ம் தேதி இந்த தேர்வுகள் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. கடந்த வருடம் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications