தமிழகத்தில் இனி இதுதான் கொரோனா சிகிச்சை கட்டணம்.. தனியார் மருத்துவமனைக்கான அறிவிப்பை வெளியிட்ட அரசு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

புதிய கட்டண விவரம்
தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சிகிச்சைக்கான கட்டணத்தை குறைத்து மாற்றியமைக்கப்பட்ட கட்டண விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

சிகிச்சைக்கு ஏற்ப கட்டணம்
வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சைக்கு தினசரி கட்டணம் ரூ.35 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணமாக ரூ.56 ஆயிரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஆக்சிஜன் தேவைப்படாத, தீவிரம் அல்லாத சிகிச்சைக்கு தினமும் ரூ.5 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணமாக ரூ.3 ஆயிரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் சிகிச்சைகள்
ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ.15 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணமாக ரூ.7,500 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் அல்லாத சிகிச்சைக்கு தினமும் ரூ.30 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணமாக ரூ.27,100 ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள், 2 மாதங்களுக்கு பின் மீண்டும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு
சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கொள்கலன் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் சேலம் உள்பட 21 மருத்துவமனைகளில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு சேலத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள 1462 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றப்பட்டது.

அச்சம் வேண்டாம்
மேலும் சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டன. மூன்றாவது அலை அச்சுறுத்தல் இருப்பதால் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கூடுதல் வசதிகள் மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே மூன்றாவது அலை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications