தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்? பாஜக இப்படி கேட்குதே..நாளை மறுநாளே சர்ப்ரைஸ் தருவாரா ஸ்டாலின்?
சென்னை: அயோத்தியில் வருகிற 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கும் முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோவில், 54,700 சதுர அடி பரப்பளவிலும், 360 அடி நீளத்திலும், 235 அடி அகலத்திலும், தரையில் இருந்து 16.5 அடி உயரத்திலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நம்முடைய பின் இந்தியாவில் கட்டப்படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான் என்பது கூடுதல் பெருமையாகும்.

நாளை மறுநாள் அயோத்தியில் நடக்க போகும் கும்பாபிஷே நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் மற்றும் இந்தியா முழுவதுமுள்ள விவிஐபிக்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
இதனை முன்னிட்டு உத்தரபிரதேச அரசு, பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கும்பாபிஷேக பணிகள் உட்பட பாதுகாப்பு பணிகளையும் முதல்வர் யோகி கவனித்து வருகிறார்.
அறிவிப்பு : இந்நிலையில், மக்களின் நம்பிக்கை உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 22-ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருக்கிறார்..
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை விழா இந்தியா முழுவதும் 22 ஜனவரி கொண்டாடப்டும். இந்த கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க ஏதுவாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 22, 2024 அன்று 2.30 மணி மூடப்படும். இது தொடர்பான உத்தரவு அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
மகிழ்ச்சி: இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த அறிவிப்பினை பின்பற்றி, வரும் 22ம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளன.
அதனால், தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்குமாறு அரசுக்கு, பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக அரசு: அந்த அறிக்கையில், "ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் மகத்தான நிகழ்வை, தமிழக மக்கள் கண்டு களித்து, இறைவன் ராமர் அருள் பெற, முதல்வர் ஸ்டாலின் விடுமுறை அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, அரைநாள் விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசு ஊழியர்களும் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications