மத்திய அரசு பாணியில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் 53 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.. பறந்த கோரிக்கை
சென்னை: மத்திய அரசு ஊழியர்களை போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு கால முறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் அகல விலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் தற்போது அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை அகவிலைப்படியாக பெற்று வருகிறார்கள்.

இனிமேல், அகவிலைப்படி 53 சதவீதமாக உயரும். கடந்த ஜூலை 1-ந் தேதி முதல், அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.9 ஆயிரத்து 448 கோடி செலவாகும் என்றாலும் 49 லட்சத்து 18 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 64 லட்சத்து 89 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையிலும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தால் அதன்படியே தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்த வேண்டும என்று கோரிக்கை எழும். தமிழக அரசும் அகவிலைப்படியே உயர்த்திவிடும்.
இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார்அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: "மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு கால முறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் அகல விலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த நிலுவைத்தொகை விரைவாக கிடைத்தால் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். எனவே தாமதமின்றி உடனே அறிவிக்க வேண்டும்" இவ்வாறு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications