தங்கம் தந்த ட்விஸ்ட்... பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏன்.. தமிழக அரசே தந்த விளக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பு வரும் என்று காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு தமிழகஅரசு விளக்கமே கொடுத்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை தொடர முடியும்.

காபந்து அரசு மட்டுமே
ஆனால் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது. நிதி ஒதுக்கீடும் செயல்படுத்த முடியாது. அரசு காபந்து அரசாகவே செயல்படும். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் முழுமையாக தேர்தல் ஆணையரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுவார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியாமல் அரசு எதையும் செயல்படுத்த முடியாது.
ஐந்தாவது பட்ஜெட் தாக்கல்
இந்த சூழலில் இன்று ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் இந்த ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் முழுமையான பட்ஜெட் கிடையாது. இடைக்கால பட்ஜெட் மட்டுமே.. இந்த பட்ஜெட்டில் அரசு பெரிய அளவில் அறிவிப்பு வெளியிடும், கவர்ச்சிகரமான திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை
ஏனெனில் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் உரிமை தொகை உயர்வு என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.. இதனால் கடைசி பட்ஜெட் ஏன் இப்படி தாக்கல் செய்யப்பட்டது என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால் அதற்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பே தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
தமிழக அரசு விளக்கம்
அதில் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று (17-2-2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரால் தாக்கல் செய்யப்படுகின்றன.
அறிவிப்புகள் வெளியிடும் மரபு இல்லை
பொதுவாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அரசின் சாதனைகளைத் தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும். இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். எனவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2026 ஜூனில் புதிய அரசு தான் வெளியிட முடியும்
தமிழகஅரசு கூறியபடியே எந்த அறிவிப்பும், திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.. திமுக அரசு ஐந்து ஆண்டுகளில் செய்த விஷயங்கள் இடம் பெற்றிருந்தது. அடுத்த சில மாதங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. முழு அறிவிப்பு என்பது 2026 ஜூன் மாதம் ஆட்சிக்கு வரும் அரசே, அறிவிக்க முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களை அறிவிப்புகளை வெளியிட முடியும்.












Click it and Unblock the Notifications