ஓட்டுப்போட போறீங்களா? நாளை அரசு பஸ்சில் இலவசமாக போகலாம்.. யாருக்கெல்லாம் வாய்ப்பு.. முழு விபரம்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஓட்டளிக்க செல்லும் மக்களுக்கு பொது போக்குவரத்தில் இலவச பயணச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட பகுதியில் பொது போக்குவரத்து இல்லாவிட்டால் அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக 40 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்தது. இந்நிலையில் தான் தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், விரலில் வைக்கும் மை உள்பட ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்தும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்க உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் பொதுமக்கள் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை, நூறு நாள் வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்பட 13 ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு என்பது முடிவடையும். அதற்குள் பொதுமக்கள் ஓட்டளிக்க வேண்டும். நாளை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் முடிந்தவரை காலையிலேயே ஓட்டுப்போட செல்வது சிறந்தது.
மேலும் எந்த காரணம் கொண்டும் வாக்காளர்கள் ஓட்டளிக்காமல் இருக்க கூடாது. ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீத ஓட்டுப்பதிவை எட்டிவிட தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த லோக்சபா தேர்தலிலும் வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை நடக்கும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஓட்டளிக்க செல்லும் மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு மற்றும் உடலியக்க குறைபாடு கொண்டவர்களுக்கு பொதுபோக்குவரத்தில் இலவச பயணச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாளை தேர்தலில் ஓட்டளிக்க சாதாரண அரசு நகர சேவை பஸ்களில் இலவச பயணச்சீட்டில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை குறிப்பிட்ட கிராமம் அவர்கள் வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் பொது போக்குவரத்து இல்லாவிட்டால் மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு மற்றும் உடலியக்க குறைபாடு கொண்டவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்வதன் மூலம் ஓட்டளிக்க அழைத்து செல்வதற்கு வாகன வசதி ஏற்படுத்தி தரப்படும். அதன்படி அவர்கள் 1950 என்ற எண் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை இல்லாவிட்டால் சக்சம் செயலி உள்ளிட்டவற்றின் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அந்த அறிவுரையின் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் இந்த வசதி நாளை கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications