மழை நீரை சேமிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
Recommended Video
சென்னை: தமிழக அரசிடம் மழை நீரை சேகரித்து வைக்க திட்டங்கள் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 101 கோடியே 43 லட்சம் செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளில் குறிப்பாக மழைநீர் வடிகால்களின் அடிப்பகுதியில் மழை நீர் பூமியில் இறங்குவதற்கு ஏதுவாக காங்கிரீட் போடக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசிடம் மழை நீரை சேமித்து வைக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சென்னையில் எத்தனை நீர் நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பினர்.
மேலும், நேற்று பெய்ந்த மழை நீர் முற்றிலும் வடிந்து விட்டதா? அதை நேரில் சென்று ஆய்வு செய்ய என்னுடைய காரில் வர மாநகராட்சி அதிகாரிகளால் முடியுமா? என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
மழை நீர் வடிகால்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வழக்கறிஞர்கள் ஆணையரை ஏன் நியமிக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மழை நீர் வடிகாலுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications