கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க.. 13 பேர் கொண்ட குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து 25,000--க்கு கீழே சென்று இருக்கிறது.
கொரோனா தொற்றை மேலும் கட்டுப்படுவதற்காக தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு பணிக்காக அதிக அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. குறிப்பாக பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு மட்டும் தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை ஆய்வு செய்து தேவையான யோசனைகளை தமிழக அரசிற்கு வழங்குவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
13 பேர் கொண்ட இந்த குழுவில் அரசு அலுவலர்கள் அல்லாத 4 பேரும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட ஒன்பது பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்த குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள். மேலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து, பாதிப்பு நிலவரங்கள் குறித்து கண்காணிப்பு செய்வார்கள். அதன்படி அரசுக்கு தேவையான யோசனையை, தகவல்களை இந்த குழு வழங்கும்.