தமிழ்நாட்டின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்க முத்திரை! கேலோ இந்தியா பற்றி தமிழக அரசு பெருமிதம்!
சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னையில் தொடங்கி வைக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பொறுத்தவரை அது தமிழ்நாட்டின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்க முத்திரை என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது பற்றி தமிழக அரசு கூறியிருப்பதாவது;
முதலமைச்சர் ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ, சென்னையில் நடத்திட முடிவு மேற்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர் அலுவலர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அனைவருடனும் இணைந்து இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்து கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்குமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4-1-2024 அன்று புதுடெல்லி சென்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாளை (19.1.2024) சென்னைக்கு வருகை தந்து மாலை 6.00 மணிக்கு ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், நிசித் பிரமாணிக், ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
23-1-2024 அன்று தொடங்கி 31-1-2024 வரை நடைபெறும். இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன.
தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஆக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம்நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதிற்குட்பட்ட வயதுப்பிரிவில் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200க்கு மேற்படட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள்.
இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ல் முதல்முறையாக தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக ( DEMO Sports) இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்கள் விளையாட்டு ஆர்வலர்களுக்கு வசதியாக இணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்திய விளையாட்டு ஆணையம், பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திட்டமிட்டுள்ளது. போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பது குறிப்படத்தக்கதாகும்.
உலக சதுரங்கக் கூட்டமைப்பின் சார்பில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை மாமல்லபுரத்தில் மகத்தான திருவிழாவாக நடத்திப் உலகளவில் புகழ் குவித்தது தமிழ்நாடு அரசு. அதேபோல, இந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள் -2023 தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று, தமிழ்நாட்டின் புகழ், மகுடத்தில் பதிக்கப்படும் மற்றொரு மாணிக்க முத்திரையாக அமையும் என்பது திண்ணம்.












Click it and Unblock the Notifications