TNEA 2025: தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
சென்னை: தமிழகத்தில் 2025- 2026-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 2 லட்சம் பொறியியல், பி.டெக் படிப்பில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது வரும் 8ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கவுன்சலிங்கிற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
நாளை தொடங்கப்படும் இந்த விண்ணப்ப பதிவு ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications