ஒரே ஒரு Whatsapp நம்பர்..16 டிபார்ட்மெண்டுக்கு சமம்! Hi அனுப்பினா போதும்..51 அரசு சேவை கைக்கு வரும்
சென்னை: அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று வரிசையில் காத்திருக்கும் காலம் இனி முடிவுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, தங்கள் கையில் உள்ள செல்போன் மூலம் தமிழக அரசு சேவைகளை பெறும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக "நம்ம அரசு" என்ற வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையின் மூலம், 16 துறைகளைச் சேர்ந்த 51 அரசு சேவைகள் ஒரே வாட்ஸ்-அப் எண்ணில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் தொடங்கப்பட்ட இந்த "நம்ம அரசு" வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை, தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப மாநாடான 'உமாஜின் 2026' நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தை நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் ழனிவேல் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு
இந்த புதிய வாட்ஸ்-அப் சேவையின் மூலம், பொதுமக்கள் இனி இணையதளங்களில் சென்று சிக்கலான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற ஆவணங்களுக்காக அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் சென்று டோக்கன் வாங்கி நாள் முழுவதும் காத்திருக்கும் நிலையும் இனி இருக்காது. மக்கள் தங்களது செல்போனில் இருக்கும் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தியே தேவையான அரசு சேவைகளை பெற முடியும்.
நம்ம அரசு வாட்ஸ் ஆப் சேவை
பொதுமக்கள் 7845252525 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் 'வணக்கம்' அல்லது 'ஹாய்' என குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக பதில் வரும். அதில் 'Select Department' என்ற இணைப்பு வழங்கப்படும். அந்த இணைப்பை கிளிக் செய்தால், எந்தெந்த துறைகளின் சேவைகள் கிடைக்கின்றன என்பதற்கான பட்டியல் தோன்றும். அதில் தேவையான துறையை தேர்வு செய்து, கேட்டுள்ள விவரங்களை வாட்ஸ்-அப்பிலேயே பதிவு செய்யலாம். தேவையான ஆவணங்களையும் அதே இடத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். அதன் பின்னர், விண்ணப்ப நிலை குறித்து தகவல்களும், சான்றிதழ்களும் வாட்ஸ்-அப் மூலமாகவே கிடைக்கும்.
வாட்ஸ் ஆப் சாட்பாட்
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, உள்ளாட்சித் துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 16 துறைகளின் 51 சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், மின்சார கட்டணம் செலுத்துதல், கோவில் தொடர்பான சேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சேவைகள் அடங்கும். பொதுமக்களின் பயன்பாடு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் மேலும் பல துறை சார்ந்த சேவைகளை இந்த "நம்ம அரசு" வாட்ஸ்-அப் தளத்தில் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இ-சேவை
மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அரசு சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்கள் உள்ளங்கையில் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் மின்னாளுமை பயணத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இனி ஒரு வாட்ஸ்-அப் எண்ணே, பல அரசு அலுவலகங்களுக்கு சமம் என்ற நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications