ரேஷன் கார்டு இருக்கா? ரூ 25 லட்சம் கடனுதவி! தமிழக அரசு அசத்தல்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: ரேஷன் கார்டு இருந்தால் போதும் ரூ 25 லட்சத்தை தமிழக அரசு கடனுதவியாக வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு, தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) மூலம் ரூ. 25 லட்சம் வரை கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
TABCEEDCO என்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்படும் தமிழக அரசின் நிறுவனமாகும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தக் கடன் உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட தகுதிகள் அவசியம்:
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
கடன் திட்டங்கள் மற்றும் வட்டி விகிதங்கள்
TABCEEDCO மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் அவற்றின் விவரங்கள்:
தனிநபர் கடன் திட்டம்
சிறு வர்த்தகம்/வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ. 25.00 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
ரூ. 1.25 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 7%.
ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 15.00 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 8%.
கடன் திரும்பச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.
குழுக் கடன் திட்டம் (சுய உதவிக் குழுக்கள்)
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில்/வணிகம் செய்வதற்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25.00 லட்சம் வரையும் ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
கடன் திரும்பச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
சுய உதவிக் குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இருபாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
கறவை மாடு வாங்க கடன்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ. 1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படும்.
ஆண்டு வட்டி விகிதம் 7%.
கடன் திரும்பச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
தேவையான ஆவணங்கள்
இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஜாதிச் சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும்.
மேலும் இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய, http://www.tabcedco.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications