ஒரே ஒரு கையெழுத்து.. கண்ணீரை துடைத்த GO.. நீயா நானாவில் பெண் பேசிய பேச்சு! உடனே கையில் எடுத்த திமுக!
சென்னை: தமிழக அரசின் ஒரே ஒரு அரசாணை (G.O.), தனது பல ஆண்டுகால கண்ணீருக்கு விடிவு கொடுத்ததாக நீயா நானா நிகழ்ச்சியில் ஏழைப் பெண் ஒருவர் கண்ணீருடன் பேசிய நிலையில், ஸ்டாலின் பிறப்பித்த அந்த அரசாணை பற்றி திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சி, நிகழ்ச்சிக்கு வெளியிலும் பெரிய அளவில் விவாதங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவது வழக்கம். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி அரசியல் தொடர்பானதாக அமைந்திருந்தது.

நீயா நானா விவாதம்: ஒருபக்கம் அரசியல் மோசம் என்று சொல்பவர்கள், எதிர்ப்புறம் அரசியல் மோசம் என்று சொல்வது தவறானது எனக் கூறுபவர்கள் என காரசாரமான விவாதம் நடைபெற்றது. அரசியல் மோசம் எனக் கூறுவது தவறானது, அரசியல் தான் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, அது பலரது கண்ணீரை துடைக்கிறது என்ற தரப்பில் தனசக்தி என்ற பெண் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
கண்ணீருடன் பேசிய பெண்: அவர் பேசுகையில், “எனது கணவர் என்னை விட்டு பிரிந்து போனபோது 8 வருடங்களுக்கு முன்பு எனது ரேஷன் கார்டு, அடையாள அட்டைகள் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். எனக்கு உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கும் செல்ல சிரமமாக இருந்தது. 8 வருடங்களாக ரேஷன் கார்டை மீட்க முடியவில்லை. என்னைப் போல கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அனைவருமே ரேஷன் கார்டால் பெரிய பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
ஏனென்றால், குடும்பத் தலைவர் என அவரது பெயரில் இருக்கும். புதிய கார்டு தனியாக வாங்க வேண்டும் என்றால் விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். உடல் நிலை சரியில்லாத எனக்கு விவாகரத்து பெற கோர்ட்டுக்கு அலைய முடியவில்லை. அரசு அலுவலகங்களுக்கு அலையாய் அலைந்தும் என்னால் ரேஷன் கார்டை பெற முடியவில்லை.

அரசு போட்ட ஆணை: அப்போதுதான் ஒரு அரசாணை வந்தது. இதுபோல பிரச்சனையுடன் வரும் பெண்களுக்கு, தாசில்தாரே நேரடியாக விசாரணை செய்து, தாசில்தாரே கணவரின் பெயரை நீக்கி தனியாக ரேஷன் கார்டை பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த அரசாணைப்படி, தாசில்தார் நேரடியாக விசாரணை நடத்தி, எனது கணவர் வசிக்கும் ஊருக்கே சென்று விசாரித்து, குடும்பத் தலைவியாக என்னைச் சேர்த்து எனக்கு ரேஷன் கார்டு கொடுத்தார்கள். உண்மை உங்கள் பக்கம் இருந்தால் அரசு உங்கள் பக்கம் நிற்கும், இது நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு G. O..
— Jaya Kanagaraja (@Kisha1625) April 14, 2024
ஒரே ஒரு கையெழுத்து..
ஏழை பெண்ணின் கதை...
கண்ணீர் வரவைத்த நீயா நானா ஷோ... 😢#INDIAAlliance #ஸ்டாலின்குரல் pic.twitter.com/pVx0xjrVJm
அதைத்தொடர்ந்து பேசிய நெறியாளர் கோபிநாத், “இந்தப் பெண்ணுக்கு சமூக ரீதியில், பொருளாதார ரீதியாக எந்த பலமும் இல்லாத நிலையில், அரசின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசு என்னையும் காப்பாற்றும், அரசின் மூலம் மீட்சி கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது.” எனச் சுட்டிக்காட்டினார்.
திமுக கொண்டாட்டம்: நீயா நானாவில் அந்தப் பெண்மணி இந்த நிகழ்வு பற்றிச் சொன்னதும் திமுகவினர், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அந்த அரசாணையைக் குறிப்பிட்டு ஸ்டாலினை கொண்டாடி வருகின்றனர். திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதியும் இது தொடர்பான காணொளியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி பெற தேவை இல்லை என்ற அரசாணை 26.10.2021 அன்று நமது திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது எனக் கூறியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. தொடர்ந்து ஏராளமானோர் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications