விஏஓ டூ தாசில்தார்.. பட்டா விஷயத்தில் சர்வேயர்களுக்கு செக்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாக உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது மிக எளிது.ஆனால் நடைமுறையில் உள்ள பழக்கங்கள் மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கி வருகிறது. விஏஓ, சர்வேயர், தாசில்தார் என வருவாய்துறை அலுவலர்களின் ஒப்புதலுக்கு பிறகே பட்டா கிடைக்கும். இதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் கையூட்டு கொடுக்கும் நிலை உள்ளதாகவும் புகார்கள் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும். காலதாமதம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
புதிதாக நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர், பத்திரப்பதிவு முடிந்த பின்னர், தனியாக வருவாய்துறை அலுவலர்களான விஏஓ, சர்வயேர், தாசில்தார் என ஒவ்வொருவரையும் அணுக வேண்டியதிருக்கும். நிலம் குறித்த விஏஓ விசாரித்து, பின்னர் சர்வேயர் நில அளவுகளை அளந்து இறுதியாக அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிலத்திற்கு தாசில்தார் பட்டா வழங்குவார்.

இது பெரிய குதிரை கொம்பாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அப்படி இல்லை. உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துகளுக்கு பத்திரப்பதிவு செய்தவுடன், ஒரு நிமிட பட்டா என்ற அடிப்படையில் உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கு விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை உள்ளது.
பட்டா எளிதாக வாங்க என்ன செய்ய வேண்டும்
இதன்படி சொத்து வாங்குபவர்கள், சொத்தை வாங்குவதற்கு முன்பே அவரது பெயரில் தனிப்பட்டா வாங்க சொல்ல வேண்டும். அதன்பிறகு பத்திரப்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் பட்டா எளிதாக கிடைத்துவிடும். இல்லாவிட்டால் பட்டா வாங்குவது சற்று சிரமமான காரியமாகிவிடும். பட்டா உடனடி மாற்ற திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 913 பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உட்பிரிவு பட்டா எப்படி
அதேநேரம் வீட்டு மனைகள் மற்றும் நிலங்களை பாகப்பிரிவினை செய்து பத்திரப்பதிவு செய்கிறீர்கள் என்றால், அதாவது உட்பிரிவு செய்து வாங்கும் சொத்துகளுக்கு இ-சேவை மையம் அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உட்பிரிவு தேவையில்லாத பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
80 மனுக்கள் பார்க்கிறார்கள்
இந்த உத்தரவு ஒன்றும்புதியது அல்ல. ஏற்கனவே அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தான். ஆனால் நடைமுறையில் பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் மக்கள் உடனே பட்டா கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தற்போது பட்டா வழங்கும் பணிகள் வேகமாக செய்யப்படுகின்றன. பொதுவாக சர்வேயர்கள் ஒரு மாதத்திற்கு 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்ததார்கள், ஆனால் இப்போது மாதத்திற்கு 80 மனுக்கள் வரை பார்ப்பதாக கூறப்படுகிறது.
வரிசைப்படியே பட்டா
எனினும் இதில் முக்கியமான நபர்களின் பட்டாக்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், சாமானியர்கள் பட்டா பெறுவது தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இதற்கும் தற்போது அரசு முற்றிப்புள்ளி வைத்துவிட்டதாம். ஒரு சர்வேயர், பொதுமக்கள் விண்ணப்பித்த தேதி அடிப்படையில் வரிசையாக தான் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு மனுவையும் தங்களது இஷ்டப்படி முன்னதாக ஆய்வு செய்ய அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
நடவடிக்கை பாயும்
தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படுவதாக கூறிய தமிழக அரசின் நில அளவைத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி, சில சொத்துகளில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் தாமதம் ஏற்படும் என்றும் அதேபோல் பட்டா மனுக்கள் மீதும் வரிசையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், எந்த காலதாமதமும் கிடையாது, அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.











Click it and Unblock the Notifications