ரேஷன் கடையில் மோடி போட்டோவுக்கு மட்டுமல்ல.. செல்ஃபி பாயிண்ட்களுக்கும் 'நோ'.. தமிழ்நாடு அரசு கறார்!
சென்னை: ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடி மின்னணு ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் ரேஷன் அட்டைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் சாமானிய மக்களுக்கு பருப்பு, பாமாயில்,கோதுமை, சர்க்கரை ஆகியவை மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழக ரேஷன் கடைகளில், 96 லட்சம் முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா 5 கிலோ அரிசியும், 18.65 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு தலா 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை மத்திய அரசு, இந்திய உணவு கழகம் வாயிலாக தமிழகத்திற்கு இலவசமாக வழங்குகிறது.
மொத்தமாக மாதத்திற்கு முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு 1.42 டன் அரிசி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல அந்தியோதயா பிரிவுக்கு, 62,650 டன் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதற்காக முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு ரூ.55,661 செலவாகிறது. அந்தியோதயா பிரிவுக்கு தோராயமாக ரூ.200 கோடி செலவாகிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்கள் மூலம் பாஜகவுக்கு மைலேஜ் அதிகரிக்கப்படுபதே இதன் பின்னால் இருக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. எனவே ரேஷன் கடைகளை அடையாளம் கண்டு தகவல் அளிக்க வேண்டும் என தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு, மத்திய உணவுத் துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படங்களை பயன்படுத்த வேண்டும், போஸ்டர் மற்றும் பேனர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி மறுத்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது, பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட் விஷயத்திலும், எந்த அனுமதியும் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இதேபோன்று அம்மாநில அரசு செல்ஃபி பாயிண்ட்களுக்கு அனுமதி மறுத்திருந்தது. இது குறித்து அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், "கேரள மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில் பிரதமரின் செல்ஃபி பாயின்ட்களை நிறுவ வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை ஒட்ட வேண்டும் என்றும், உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு மத்திய அரசின் லோகோக்கள் கொண்ட கேரி பேக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேரள மாநில உணவுத் துறைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இது சரியல்ல என்பதனையும், கேரளத்தில் இதனை செயல்படுத்துவது கடினம் என்பதையும் மத்திய அரசிடம் தெரிவிப்போம். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரமாக மத்திய அரசு இதனை பயன்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் கேரள அரசு முயற்சி எடுக்கும்" என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே வரி பகிர்வு விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்கள் கைகோர்த்திருந்தன. தற்போது செல்ஃபி பாயிண்ட் விவகாரத்திலும் தென் மாநிலங்கள் ஒன்று திரண்டு வருவது பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications