ஆம்ஸ்ட்ராங்கை கண்ணியத்துடன் அடக்கம் செய்யுங்கள்! 200 சதுர அடி நிலம் தர தயார்- தமிழக அரசு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் 200 சதுர அடியில் அரசு இடம் ஒதுக்க தயார் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் மனுதாரரோ மணிமண்டபமும் கட்ட வேண்டி உள்ளதால் 7500 சதுர அடியில் இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாத் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் நிலை குலைந்து ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அவருடைய உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என குடும்பத்தினர் கேட்ட நிலையில் அதற்கு போலீஸார் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலேயே போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் இரவு ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்ட்ரல் முதல் பெரம்பூர் வரை அவருடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவருடைய உடல் பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என அவருடைய மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் , பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் குறுகிய பகுதி, குடியிருப்புகள் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் ஆம்ஸ்ட்ராங் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நிலம் கொடுக்க மனம் உள்ளது, ஆனால் விதிமுறையை பின்பற்ற வேண்டுமே. ஆம்ஸ்ட்ராங் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் மணி மண்டபம் கட்டுவார்கள். அந்த இடத்தில் வீரவணக்கம் செலுத்த அவருடைய ஆதரவாளர்கள் புறப்பட்டால் அந்த குறுகிய இடத்தில் நெரிசல் ஏற்படும் என தெரிவித்தனர்.
இந்த வழக்கு பகல் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதம் செய்த வழக்கறிஞர், ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடியில் இடம் தர தயார் என தெரிவித்தார். ஆனால் மனுதாரரோ ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டியுள்ளதால் பெரம்பூரிலேயே 7500 சதுர அடியில் இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications