பதிவுக்கட்டணம் உயர்ந்தது.. "இடி" போல வந்த கட்டண அறிவிப்பு.. அடுக்குமாடி குடியிருப்பு விலையும் உயர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக்கட்டணத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி, அப்பார்ட்மென்ட் ஓனர்களுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்கனவே கட்டணம் அமலில் உள்ளது.. அந்த பதிவு கட்டணத்துடன், புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டு, அது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.

கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில், குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை இனி தனியாக பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல, கட்டுமான ஒப்பந்த கட்டணமாக தனியே 4 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கட்டண உயர்வு: இந்த புதிய கட்டண விகிதங்களை உடனடியாக அமல்படுத்தும் வகையில், அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு, பதிவுத்துறை ஐஜி-க்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், தொடர்ந்து நடந்து வரும் முறைகேடுகளை தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவுக் கட்டணம் விதிக்கப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி விளக்கம் தந்துள்ளார்..
சார் பதிவாளர்கள்: இது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது...
உதாரணத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு, ஒரு அப்பார்ட்மென்ட் வாங்க வேண்டியிருந்தால், விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் என தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினாலே இதுவரை போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போதைய தனிப்பதிவு கட்டண உயர்வு காரணமாக, மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும்.
அதிர்ச்சி: அதாவது ரூ.50லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புக்கு 4.5 லட்சம் அளவுக்கு தனி பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணம் இனி வசூலிக்கப்படுவதுடன், ஆங்காங்கே நடைபெறும் முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications