ஸ்வீட் நியூஸ்.. "நமக்கு நாமே" திட்டத்துக்கு ரூ.100 கோடி விடுவித்து உத்தரவு.. ஸ்டாலின் அரசின் அதிரடி
சென்னை: 2023-24ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதி மற்றும் நிதி விடுவிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.. நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி நிதிநிலை அறிக்கையில், இந்த நமக்கு நாமே திட்டம் குறித்து அறிவித்திருந்தார்.. மக்களின் சுய உதவி ,சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலுப்படுத்தவும், அதை பரவலாகவும், மக்கள் பங்கேற்புடன் கூடியதுதான், நமக்கு நாமே திட்டம்..
வளர்ச்சி பணிகள்: வளர்ச்சி பணிகளை திட்டமிடுதல், வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல், மேற்பார்வை செய்தல் போன்ற அனைத்து மக்கள் பணிகளும் இந்த திட்டத்தில் இருக்கும்.

திமுக ஆட்சி காலத்தில் 2011ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தவில்லை. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த 2021-ல் "நமக்கு நாமே திட்டம்" மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
நமக்கு நாமே : மாநில அளவில் 300 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ரூ.100 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையையும் தமிழக அரசு அப்போது வெளியிட்டிருந்தது.. ஊரகப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது..
இந்நிலையில், 2023-24ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் 'நமக்கு நாமே' திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது. இதைத்தவிர, நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை: மொத்தமுள்ள 100 கோடி ரூபாயில், 50 கோடியானது முதற்கட்டமாக இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்தது.. மீதமுள்ள 50 கோடியானது பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கும்பட்சத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமுறைகள்: இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகங்கள், மிதிவண்டி நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் கட்டுதல், அரசு விடுதிகளுக்கு கட்டிடம் கட்டுதல், உள் விளையாட்டரங்கம் அமைத்தல், சமுதாயக் கூடம் கட்டுதல், அரசு பள்ளி கட்டிடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications