மேகதாது அணை.. தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து பின்னடைவு.. தடுமாறியது எங்கே?
சென்னை: காவிரி விவகாரத்தில் முதல் முறையாக கர்நாடகாவின் கை ஓங்கி இருப்பது போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
இரு மாநிலங்கள் இடையேயான நதிநீர் பிரச்சினை என்று வந்தால் உலகம் முழுக்க இருப்பது ஒரே சட்டம்தான். கடைசியாக அந்த நதி எங்கு சென்று சேருகிறதோ அந்த மாநிலத்துக்கு அல்லது அந்த பிராந்தியத்துக்கு தான் உற்பத்தியாகும் இடத்தை சேர்ந்தவர்களை விட அதிக உரிமை இருக்கிறது . இந்தியாவிலும் இதே தான் சட்டம்.
எனவேதான் காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு தமிழகத்திற்கான நீர் பகிர்ந்து வழங்கப்படுகிற

யாருக்கு எவ்வளவு தண்ணீர்?
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்ட தண்ணீர் அளவை விட இது 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவு. அந்த தண்ணீர் கர்நாடகாவுக்கு தான் கூடுதலாக கிடைக்கிறது. மேலும் பெங்களூர் நகரம் வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு குடிநீர் பயன்பாட்டுக்காக காவிரியில் இருந்து கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்துக்கு குறைக்கப்பட்ட தண்ணீர் அளவில் இருந்து பெங்களூர் நகரம் இந்த தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம்.

வம்பு செய்யும் கர்நாடகா
இப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ராம்நகர் மாவட்டத்தில் காவிரி குறுக்கே மேகதாது பகுதியில் தடுப்பு அணை கட்ட முடிவு செய்துள்ளது கர்நாடக அரசு. பெங்களூருக்கு தண்ணீர் தேவை என்றும் காரணம் காட்டுகிறது. காவிரி நதிக்கு ஒரு மாநிலம் மட்டும் உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த போதிலும் இந்த நதிக்கு குறுக்கே நாங்கள் அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று கர்நாடக அரசு ஆணவமாக தெரிவித்தது.

ஆய்வு நடத்த முயற்சி
மேகதாது அணைக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்க முன்பாகவே அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கர்நாடகா வாங்கி குவித்தது. இது செய்தியாக, நாளிதழில் வெளியானதால், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தானாக முன்வந்து, விசாரிக்கத் தொடங்கியது. கட்டுமானத்துக்கு ஏற்பாடுகள் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு நான்கு உறுப்பினர்களை கொண்ட வல்லுனர் குழுவை அமைத்தது.

தமிழ்நாட்டுக்கு முதல் பின்னடைவு
இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, மேகதாது அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், மேகதாது அணைக்கு அனுமதி பெறுவதற்கான கர்நாடக அரசின் விண்ணப்பம் மத்திய அரசிடமும் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் தலையிட தேவை கிடையாது என்று கடந்த மாதம் 18ம் தேதி கூறி, வழக்கை முடித்து வைத்து விட்டது. மேகதாது அணைப் பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதை சட்டப்பூர்வமாக கண்டுபிடிப்பதற்கான முயற்சி அங்கு அடிபட்டுப் போனது . இது தமிழகத்திற்கு முதல் பின்னடைவு.

கோட்டை விட்டுட்டோமே
வழக்கு நிலுவையில் இருப்பதால் இப்போது அதை விசாரிக்க வேண்டாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கூறியதே தவிர, அந்த அணையைக் கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி செய்கிறது, அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் வழக்கறிஞர் இந்த விஷயத்தில் தீர்ப்பாயத்தின் கருத்தை கேட்டுப் பெறுவதில் தவறிவிட்டார். கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கவில்லை என்பதை நிரூபணம் செய்ய கிடைத்த வாய்ப்பு தமிழ்நாடு அரசால் தவற விடப்பட்டது.

தீர்ப்பாய உத்தரவால் எகத்தாளம்
இதைத்தான் கர்நாடக அரசு தங்களுக்கு கிடைத்த வெற்றியாக நினைத்துக் கொள்கிறது. தாங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பதை போல அணை கட்டுவதில் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனே தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அனுமதியில்லாமல் அணைகட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இன்னும் அந்த பணிகளை துவங்கவில்லை.

மதிக்காத எடியூரப்பா
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை விரைவுபடுத்தி அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அந்த சட்ட நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்ட பிறகும் கூட அணை திட்டத்தை கைவிட மாட்டோம் கண்டிப்பாக செய்தே தீருவோம் என்று எடியூரப்பா இன்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக கட்சிகளின் அரசியல்
இது இரு மாநில வாழ்வாதாரப் பிரச்சனை என்பதை தாண்டி அரசியல் செய்யும் பிரச்சினையாகவும் உள்ளது. கர்நாடகாவில் எந்த கட்சியும், காவிரி விஷயத்தில் விட்டுத் தராது. வம்பு செய்யும். ஏனெனில் விட்டுத் தந்துவிட்டால் எதிர்க்கட்சிகள் அதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும். பழைய மைசூர் மாகாணத்தில் மொத்தமாக ஆளும் கட்சிக்கு ஓட்டு வங்கி போய்விடும். எனவே, அரசியல் ரீதியாக இந்த பிரச்சனைக்கு எப்போதுமே தீர்வு ஏற்றப்பட்டது கிடையாது.

சட்டப் போராட்டமே தீர்வு
தமிழ்நாடு எப்போதுமே சட்டப் போராட்டத்தின் மூலமாக தான் காவிரியில், தங்களது உரிமையை நிலைநாட்டி வந்துள்ளது. ஆனால் சமீபகாலமாக.. கிட்டத்தட்ட ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பின்தங்கி விட்டதாகத்தான் தெரிகிறது. தற்போது புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில் மீண்டும் பழைய உத்வேகத்துடன் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். மேகதாது அணையை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பெறவேண்டும், அடுத்ததாக ஆய்வுப் பணிகளுக்கு குழுவை அமைக்க வேண்டும். இந்த இரண்டையும் போர்க்கால அடிப்படையில் செய்யாவிட்டால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சத்தமே இல்லாமல் தடுப்பணை கட்டி எக்காளமிடும் கர்நாடகா .. மேகதாது அணையை நமது மாநிலத் தொழிலாளர்களை வைத்தே கட்டி முடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications