44-வது செஸ் ஒலிம்பியாட்! வெளிநாட்டு வீரர்களுக்கு கைத்தறித் துண்டுகளை அணிவித்து வரவேற்கும் தமிழக அரசு
சென்னை: சர்வதேச செஸ் ஒல்ம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தரும் வெளிநாட்டு வீரர்களுக்கு கைத்தறித் துண்டுகளை அணிவித்து தமிழக அரசு வரவேற்பு கொடுத்து வருகிறது.
வெள்ளை நிற கைத்தறித் துண்டுக்கள் அணிவிக்கப்படுவதை மத்திய ஆப்ரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் ஆச்சரியம் விலகாமல் பார்க்கின்றனர்.
மேலும், பலர் விமான நிலையத்திலிருந்து தாங்கள் தங்கும் நட்சத்திர விடுதி வரை தங்கள் கழுத்துக்களில் இருந்து அந்த துண்டுகளை எடுப்பதேயில்லை.

செஸ் ஒலிம்பியாட்
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியால் அந்த நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
187 நாடுகளில் இருந்து வீரர்களும், பார்வையாளர்களும் தமிழகத்திற்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு வீரர்கள்
நேற்று முன் தினம் முதல் பல்வேறு நாடுகளில் இருந்தும் சென்னையில் செஸ் வீரர்கள் குவிந்து வருகின்றனர். உஸ்பெகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், உருகுவே, செர்பியா, வியட்னாம், மத்திய ஆப்ரிக்கா, அங்கோலா, அரூபா, கஜகஸ்தான், பாலஸ்தீன், சைப்ரஸ்,உக்ரைன், ரஷ்யா, ஓமன், தான்சானியா, ஜிம்பாப்வே, ஹங்கேரி, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, ருமேனியா, ஃபிஜி தீவு என உலகின் நாலா திசைகளில் இருந்தும் வீரர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

விருந்தோம்பல்
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் இவர்களுக்கான விருந்தோம்பல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் வீரர்களை வரவேற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு, ஒவ்வொரு வீரர்களுக்கும் கைத்தறித்துண்டுகளை அணிவித்து வரவேற்பு கொடுக்கிறது. இதனை மிகுந்த பெருமையாக கருதும் வெளிநாட்டு வீரர்கள் கழுத்தில் அணியப்பட்ட துண்டுகளுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

மிதவைப் பேருந்து
வெளிநாட்டு வீரர்களை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச்செல்ல மிதவை சொகுசுப் பேருந்துகள் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றிரவும் நாளையும் இன்னும் நூற்றக்கணக்கான வீரர்கள் தமிழகம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications