விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
தேனி: பாரம்பரிய நெல் விதைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
தேனி வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதைகளை இனத்தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 10 விவசாயிகளுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்த பட்சம் 100 பாரம்பரிய நெல் ரகத்தை விதை வங்கியில் பராமரித்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ரசாயனம் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும்.
விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும்.
பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு அக்ரிஸ்நெட் என்ற இணையதளம் மற்றும் உழவன் செயலியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தேனி வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விவசாயிகளை ஊக்குவிக்க, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு, அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி 3 தவணையில், தலா, 2,000 ரூபாய் வீதம், விவசாயிகளின் வங்கிக்கணக்கில், சேர்க்கப்பட்டு வருகிறது.. இதுவரை, இரண்டு தவணை தொகையை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 3வது தவணை ஊக்கத்தொகைக்கு முன்னர் சில கட்டுப்பாடுகளை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி விவசாயிகளின் ஆதார் அட்டையில் உள்ள பெயரும், வங்கி சேமிப்புக்கணக்கு புத்தகத்தில் உள்ள பெயரும் பிழையின்றி, ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே, அடுத்த தவணை தொகை, அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்தது. மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.
ஏனெனில் பெரும்பாலான விவசாயிகளின் பெயரில் உள்ள எழுத்துக்கள், ஆதார் அட்டையிலும், வங்கி கணக்கு புத்தகத்திலும் மாறுபடுவதால், திருத்தம் செய்து கொள்ள, விவசாயிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி அவர்கள் திருத்தமும் செய்தனர். பலர் ஆர்வமுடன் வங்கி கணக்கை ஆதார் உடன் இணைக்கவும் செய்தனர். அவர்களுக்கு 3வது தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications