வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் சிறை! வங்கிகள் மீதும் புகார் கொடுக்க முடியுமா? விளக்கம்
சென்னை: கடன் நிறுவனங்கள், தங்கள் கடனை வசூலிக்க எடுக்கும் நடவடிக்கையால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. இப்பிரச்சனையை சரி செய்ய, கடன் நிறுவனங்களின் நடவடிக்கையில் இருந்து மக்களை காப்பது தொடர்பாக தமிழக அரசு மசோதாவை இயற்றியிருந்தது. தற்போது இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இந்த மசோதா என்ன சொல்கிறது? வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் சிறையா? யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்? வங்கிகள் மீதும் புகார் கொடுக்க முடியுமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி விளக்கமளித்துள்ளார். செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது,

"கடன் கொடுக்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதற்கு தடை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இந்த சட்டம். இதுல எங்க போய் புகார் கொடுக்கலாம் அப்படின்னு சொன்னா, அரசாங்கம் அந்தந்த அதிகார வரம்பில் பதிவாளரை நியமிக்க வேண்டும் என சொல்லி இருக்கு.
வலுக்கட்டாயமாக கடன் வசூலிக்கப்படுகிறது என்றோ, கடன் வாங்கப்பட்ட நபரோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களோ துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தெரிந்தாலோ, அந்த பதிவாளர் தன்னிச்சையாக புகார பதிவு பண்ணலாம். அல்லது அந்த அந்த புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பலாம். அது மட்டும் இல்லாம, கடனை வசூலிப்பதற்காக அடியார்களை அனுப்புகிறார்கள், மிரட்டுறாங்க, என்னுடைய சொத்தை ஜப்தி பண்ணிடுவோமுன்னு சொல்றாங்க என கடன் கொடுத்தவர்கள் பயமுறுத்தினால், பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுக்கலாம்.
எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தால் அந்த புகாரை நிராகரிக்க கூடாது என்பதை சட்டம் மிக தெளிவாக சொல்கிறது. மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி, தனிநபர்கள் அல்லது ஒரு குழுவாக இருந்து கடன் கொடுக்கிறவங்க அல்லது டிஜிட்டல் கடன் கொடுப்பவர்கள், கடன்களை கொடுத்துவிட்டு அந்த கடனை வசூலிப்பதற்காக வலுக்கட்டாய நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.
வலுக்கட்டாயம் நடவடிக்கை என்றால் என்ன?
கடன் வாங்கிய நபர் அல்லது கடன் வாங்கிய நபரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர் நலன் சார்ந்து இயங்குகிற நபர்கள் என யாரையும் துன்புறுத்தக் கூடாது. கடன் வசூலிக்கிறேன் என்கிற பெயரில், அப்படி துன்புறுத்தலில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும். மகளிர் சுய உதவி குழுபெண்கள், அதேபோல விவசாயிகள் இவர்களெல்லாம் தன்னுடைய தேவைக்காகவோ அல்லது குடும்ப தேவைக்காகவோ அல்லது திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக கடன் வாங்குகிறார்கள்.
இதில் யாருக்கெல்லாம் இந்த சட்டம் பொருந்தும் எனில், எந்த ஒரு குடும்பமும் ஆண்டுக்கு மூன்று லட்சத்திற்கு மிகாமல் வருமானம் ஈட்டுகிறதோ, அக்குடும்பங்களுக்கு எல்லாம் இந்த சட்டம் பொருந்தும். அது மட்டும் அல்ல, கடனை வசூலிப்பதற்காக வலுக்கட்டாய நடவடிக்கையை எடுக்கிற தனிநபராக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பொருந்தும்.
கடனை வாங்கியதற்கு பிறகு, அதை எவ்வளவு திருப்பி செலுத்தி இருக்கிறார்கள்? எவ்வளவு வட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது? என்கிற ஆண்டு கணக்கை ஒரு நிறுவனம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால், அதற்கான தண்டனையை இந்த சட்டம் வலியுறுத்துகிறது. வலுக்கட்டாய நடவடிக்கையை எடுப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். அந்த அபராதம் ஒரு லட்சம் வரை கூட இருக்கலாம்.
இது வங்கிகளுக்கு பொருந்தாது. நான் பேங்கிங் செக்டார் வங்கிகளுக்கு இது பொருந்தாது.
ஆனால், வங்கிகள் கூட வலுக்கட்டாய் நடவடிக்கையை செய்யக்கூடாது. ஒரு விவசாயி டிராக்டர் லோன் வாங்கி, கட்ட முடியல. எனவே அடியார்களை வைத்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்வது, வாகன கடன் வாங்கி கட்ட முடியாதவர்களிடம் வாகனத்தை பறிமுதல் செய்வது சட்டப்படி தவறு என உச்சநீதிமன்றம் தெளிவாக ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறது. கடன் தொல்லையால் ஏராளமான உயிர்கள் பறிபோனதே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான முக்கியமான காரணம்" என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications