சூப்பர்..தேவையான ஏற்பாடு! மழையை சிறப்பாக சமாளிக்கும் தமிழக அரசு! புகழ்ந்து தள்ளிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: பருவ மழையை சமாளிக்க தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் நேற்று முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை ,வேளச்சேரி, நெற்குன்றம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதே போல சென்னையின் அண்ணா சாலை, தி நகர், சைதாப்பேட்டை, கிண்டி, திருவல்லிக்கேணி, அசோக் நகர், ஜாஃபர்கான் பேட்டை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில்பலக்க காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
அதே நேரத்தில் மழை நீரை வெளியேற்றுவதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவு சாலைகளில்
வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையில் வாகன போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதை அடுத்து தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் அதிகாரிகளும் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அதனை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பருவ மழையை சமாளிக்க தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் நெசவாளர் குடும்பத்தினரை சந்திக்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி நெசவாளர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார். நெசவாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து சென்னை மழை பாதிப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி,” வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று காலை மழை தொடங்கியுள்ளது. தற்போது அதிமாக பெய்து வருகிறது. எதிர்பார்த்ததை போல அடுத்த 2 நாளுக்கு மழைப் பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது. மழைப் பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்” என்று கூறினார்.












Click it and Unblock the Notifications